கண்டி மாவட்டம், கம்பளை நகருக்கு அருகிலுள்ள கஹட்டபிட்டிய பகுதியில் இன்று (29) காலை பயங்கர மண்சரிவு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மலையகப் பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
கடந்த சில நாட்களாக மலையகப் பிராந்தியத்தில் நிலவி வரும்மழையுடனான காலநிலை காரணமாக, கஹட்டபிட்டிய பகுதியிலுள்ள மலைப்பாங்கான நிலப்பரப்புகளில் மண்சரிவு அபாயம் நிலவி வந்தது. இந்நிலையில், இன்று காலை திடீரென ஒரு பகுதியின் மண் திட்டு சரிந்து விழுந்துள்ளது.
மண்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு மிக அருகில் அமைந்திருந்த இரண்டு மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று, அஸ்திவாரம் சரிந்ததன் காரணமாக அப்படியே மெதுவாகச் சரிந்து, நொடிப்பொழுதில் தரைமட்டமாகிறது.
கட்டிடம் சரிந்து விழுவதற்குச் சற்று முன்னதாகவே, அங்கிருந்த மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறிவிட்டதால், பாரிய உயிர்ச் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. எனினும், ஒரு நபர் படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டிருந்தபோது கட்டிடம் சரிவதைக் கண்டு அதிர்ச்சியுடன் ஓடும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த அனர்த்தத்தில், சரிந்து விழுந்த குடியிருப்பு கட்டிடம் முற்றிலும் நாசமடைந்துள்ளது. மேலும், அருகில் உள்ள சில வீடுகளுக்கும் பகுதியளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மண்சரிவினால் பிரதான வீதியின் ஒரு பகுதியில் மண் மற்றும் மரங்கள் சரிந்து விழுந்துள்ளதால், போக்குவரத்து தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

