மொரட்டுவை, எகொட உயன காலி வீதியில் அமைந்துள்ள கிரிக்கெட் மட்டை (Cricket Bats) உற்பத்தி மற்றும் விற்பனை நிலையம் ஒன்றும், அதனுடன் இணைந்த வீடும் ஞாயிற்றுக்கிழமை (26) நண்பகல் ஏற்பட்ட தீ பரவலால் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக எகொட உயன பொலிஸார் தெரிவித்தனர்.
தீ விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் விற்பனை நிலையத்தின் உரிமையாளர், அவரது மனைவி மற்றும் இரு மகள்கள் வீட்டில் இருந்துள்ளனர். எனினும், அவர்கள் உடனடியாக வீட்டிலிருந்து வெளியேறியதால் உயிர் தப்பியுள்ளனர்.
மொரட்டுவை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவை சேர்ந்த சுமார் 10 அதிகாரிகள், 3 நீர் பௌசர்களை பயன்படுத்தி தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். இருப்பினும், தீயணைப்பு படையினர் வருவதற்குள்ளேயே வீடும் விற்பனை நிலையமும் முற்றாக எரிந்து நாசமாகியிருந்தன.
தீ பரவல் ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து எகொட உயன பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


