கோலாலம்பூர்:
பெட்டாலிங் ஜெயா, ஜாலான் SS 5D/6 பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட பயங்கர தீ சம்பவத்தில் இரண்டு மாடி வீடுகள் மற்றும் நான்கு வாகனங்கள் பலத்த சேதமடைந்தன.
நேற்று இரவு 7:40 மணியளவில் தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது. தகவலின் அடிப்படையில், பெட்டாலிங் ஜெயா மற்றும் டாமன்சாரா தீயணைப்பு நிலையங்களில் இருந்து 16 வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
தீயணைப்புப் படைத் தளபதி முகமட் பாடில் அப்துல் ஷுக்கூர் கூறுகையில், “இந்தத் தீ விபத்தில் 20×70 சதுர அடி பரப்பளவு கொண்ட இரண்டு மாடி வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு வீடு 40 சதவீதமும், அதற்கு அருகிலுள்ள வீடு 30 சதவீதமும் சேதமடைந்துள்ளன,” எனத் தெரிவித்தார்.
வீடுகளுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கும் தீ பரவியதில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது: இதில் Perodua Axia: முழுமையாக எரிந்து சாம்பலானது, Proton Preve: 50 சதவீதம் சேதம், Proton X50: 50 சதவீதம் சேதம் மற்றும் மோட்டார் சைக்கிள்: ஒன்று முற்றிலும் தீக்கிரையானது.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை. இரண்டு தீயணைப்பு வாகனங்கள் (FRT) மற்றும் ஒரு அவசர மருத்துவ மீட்பு சேவை (EMRS) வாகனம் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
தீ விபத்திற்கான காரணம் மற்றும் சொத்து இழப்பு மதிப்பீடு குறித்து அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.




