தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், போதைப்பொருள் கடத்தல் கும்பல் மற்றும் சட்டவிரோத ஆயுதக் குழுக்களின் அட்டூழியம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தென்மேற்கு கொலம்பியாவின் காஜிபியோ பகுதியில் உள்ள ‘பான்-அமெரிக்கன்’ நெடுஞ்சாலையில் பயணித்த பயணிகள் பேருந்து ஒன்றில், நேற்று பயங்கர குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பேருந்து ஓடிக்கொண்டிருந்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் கொடூரத் தாக்குதலில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், 5 குழந்தைகள் உட்பட 38 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் காஜிபியோ பகுதியில் 26-க்கும் மேற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. அங்குள்ள ஆயுதக் கும்பல்கள், காவல் நிலையங்கள் மற்றும் ரேடார் மையங்களை இலக்காக வைத்துத் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
“இந்த பேருந்துத் தாக்குதலுக்கு, நாட்டின் மிக முக்கியமான குற்றவாளியான இவான் மோர்டிஸ்கோவின் கும்பல் மற்றும் ஜெய்ம் மார்டினெஸ் கும்பல் தான் காரணம்,” என கொலம்பிய ராணுவ தளபதி ஜெனரல் ஹியூகோ லோபஸ் தெரிவித்துள்ளார். கொலம்பிய அதிபர் குஸ்தாவோ பெட்ரோ இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.


