அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பாகிஸ்தானில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா தயாராக இருக்கிறது. ஆனால் ஈரான் பேச்சுவார்த்தைக்கு வர கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டிருக்கிறது. ஏற்கெனவே இருந்த போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் போர் நிறுத்தத்தை தற்போது நீட்டித்து இருக்கிறார்.
அதேசமயம் இப்போது ஈரான் துறைமுகங்களுக்குள் எந்த வித கப்பலும் செல்ல விடாமல் அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் அரசு மீண்டும் மூடிவிட்டது. அமெரிக்கா தற்போது ஈரான் துறைமுகங்களுக்குள் கப்பல் வர முடியாமல் முற்றுகையிட்டு இருப்பதை விலக்கிக்கொண்டால் மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தியை முற்றிலுமாக போக்குவரத்திற்கு திறப்போம் என்று ஈரான் கூறிக்கொண்டிருக்கிறது.
ஆனால் ஈரானுடன் நிரந்தர ஒப்பந்தம் ஏற்படாத வரை ஈரான் துறைமுகத்திற்குள் எந்தக் கப்பலையும் விடமாட்டோம் என்று அமெரிக்கா கூறி வருகிறது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயலும் சரக்கு கப்பல்களை ஈரான் புரட்சிகர காவல் படை தாக்கி வருகிறது. சில கப்பல்கள் விளக்குகளை அணைத்துவிட்டு, கப்பல் வழித்தட சிக்னல்களையும் ஆஃப் செய்துவிட்டு ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல முயற்சிக்கின்றன.
அது போன்ற கப்பல்களை ஈரான் புரட்சிகர காவல் படையினர் தாக்கி வருகின்றனர். ஏற்கெனவே இது போன்று இரு இந்திய கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் மேலும் இரண்டு இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயற்சி செய்துள்ளன. அதில் ஒரு கப்பல் துபாயில் இருந்து குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்திற்குச் சென்று கொண்டிருந்தது. பனாமா மற்றும் லிபிய கொடிகளுடன் இரண்டு இந்திய கப்பல்களும் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயன்றதைக் கண்டுபிடித்த ஈரான் புரட்சிகர காவல் படையினர், அக்கப்பல்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
அதோடு அக்கப்பல்கள் இரண்டையும் பறிமுதல் செய்து ஈரான் துறைமுகத்திற்கு கொண்டு சென்றுவிட்டனர். துபாயிலிருந்து வந்து கொண்டிருந்த அந்தக் கப்பல்களிடம் தேவையான அனுமதி இல்லை என்றும், அவை கடல் வழித்தட அமைப்பில் மோசடி செய்ததாகவும் ஈரானிய கடற்படை கூறியுள்ளது.

