“இரத்தினபுரி மாவட்ட நீலகாமம் தோட்டத்தில், தோட்ட நிர்வாகத்தின் ‘ஹெல்மெட்’ குண்டர்கள், வீடில்லாத மலையகத் தமிழ் பிரஜை ஒருவர் கட்டிய வீட்டை உடைத்து, அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். கோட்டாபய ஆட்சியில் நடந்த இத்தகைய அராஜகங்களை நான் நேரில் சென்று தடுத்துள்ளேன். தற்போது அநுர குமார திசாநாயக்க ஆட்சியிலும் அதே இனவாத அராஜகம் தொடர்கிறதா?” எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இரத்தினபுரி, காவத்தை பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
“சட்டவிரோதமாக வீடு கட்டினார் எனக் கூறி, நிசாந்தகுமார் என்பவர் காவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் காயமடைந்த கணேசன் விஜயகாந்த் என்பவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரத்தினபுரியிலிருந்து ஜனநாயக மக்கள் முன்னணியின் உபதலைவர் சந்திரகுமார் இது குறித்துத் தகவல் தந்தவுடனேயே, காவத்தை பொலிஸ் பொறுப்பதிகாரி பிரேமரத்னவைத் தொடர்புகொண்டு நான் கடுமையாக எச்சரித்தேன்.
‘வீட்டுப் பிரச்சினையை ஜனாதிபதி அநுரவின் அரசாங்கத்துடன் நாம் பார்த்துக்கொள்கிறோம். முதலில் தாக்குதல் நடத்திய குண்டர்களைக் கைது செய்யுங்கள்; கைதான நிசாந்தனைப் பிணையில் விடுவியுங்கள்’ எனப் பொலிஸாரிடம் வலியுறுத்தினேன். அதன்பின்னரே கைதான நிசாந்தன் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இவ்விவகாரத்தில் தற்போதைய அரசாங்கத்தில் உள்ள மலையக அமைச்சர்கள் உடனடியாகத் தலையிட வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் நிலைநாட்டப்பட வேண்டுமெனில், பின்வரும் நிலைப்பாடுகள் அவசியமாகும்:
தோட்டங்களில் உள்ள தரிசு நிலங்களில், வீடில்லாத தொழிலாளர்கள் தற்காலிகக் குடியிருப்புகளை அமைத்துக்கொள்ள உரிமை வழங்கப்பட வேண்டும். தற்போது இந்த உரிமை பெரும்பான்மை இனத்தவருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
இராணுவத்திலிருந்து விலகி வந்தவர்களைக் கொண்டு, தோட்ட நிர்வாகங்கள் குண்டர் படைகளை உருவாக்கி அச்சுறுத்துவதைத் தவிர்க்க வேண்டும்,” என அவர் தெரிவித்தார்.


