சர்வதேச விமான நிலையங்கள் கவுன்சில் (ACI) வெளியிட்டிருக்கும் சமீபத்திய அறிக்கை 2025, வெறும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் விமான நிலையங்களுக்குள் பாய்ந்தோடும் கோடிக்கணக்கான மனிதர்களின் இயக்கத்தை, அவர்களின் கனவுகளை, வர்த்தகத்தை வரைபடமிட்டுக் காட்டுகிறது.
980 கோடி பயணிகள்
2025-ம் ஆண்டில் மட்டும், உலகெங்கிலும் சுமார் 980 கோடி பயணிகள் விமானங்களில் பறந்திருக்கிறார்கள்.
இது 2024-ம் ஆண்டை விட 3.6 சதவீதம் அதிகம். இந்த மாபெரும் பயணிகள் வெள்ளத்தில், எந்த விமான நிலையம் முதலிடத்தில் மிதக்கிறது? கடந்த 28 ஆண்டுகளில் 27 முறை தன் சிம்மாசனத்தை யாருக்கும் விட்டுக்கொடுக்காத அமெரிக்காவின் ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லாண்டா சர்வதேச விமான நிலையம் (ATL), இந்த ஆண்டும் தனது மகுடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.
2025-ல் மட்டும் 10.63 கோடி பயணிகளைக் கையாண்டு, உலகின் பரபரப்பான விமான நிலையமாக அது மீண்டும் உருவெடுத்திருக்கிறது.
அட்லாண்டாவின் அசைக்க முடியாத கோட்டையில் மெல்லிய விரிசல் விழுந்திருக்கிறதோ என்ற கேள்வியை புள்ளிவிவரங்கள் எழுப்புகின்றன. காரணம், 2024-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், அதன் பயணிகள் எண்ணிக்கை 1.6 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது. அதே சமயம், அதன் போட்டியாளர்களான துபாய் மற்றும் டோக்கியோ விமான நிலையங்கள் அசுர வேகத்தில் முன்னேறி, அட்லாண்டாவுடனான இடைவெளியைக் கணிசமாகக் குறைத்துள்ளன.
