இந்தியா மற்றும் தென்கொரியா இடையேயான இருதரப்பு வர்த்தகம் ரூ.2.51 லட்சம் கோடியாக தற்போது உள்ளது. இதனை 2030-ம் ஆண்டில் ரூ.4.65 லட்சம் கோடியாக அதிகரிக்க செய்வதற்கான பல்வேறு முக்கிய முடிவுகளை நாங்கள் இன்று எடுத்திருக்கிறோம் என்றார். வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்த, தொழில் ஒத்துழைப்பு கமிட்டியை உருவாக்கி உள்ளோம் என்றும் அவர் பேசியுள்ளார்.
இதன்பின்பு, இந்திய-கொரிய வர்த்தக மாநாட்டில் பங்கேற்று பேசிய தென்கொரிய ஜனாதிபதி லீ, இரு நாடுகள் இடையே கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இன்னும் பல்வேறு துறைகளில் இந்த ஒத்துழைப்பை நாம் விரிவுபடுத்துவோம் என நம்புகிறேன் என்றார்.
நிலையான மற்றும் நீடித்த கூட்டுறவு உள்ளது என கொரிய மற்றும் இந்திய நிறுவனங்கள் உணருவதற்காக, ஒரு நிர்வாக கட்டமைப்பை ஏற்படுத்த, கொரியா-இந்தியா விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக நடந்து வரும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும் என்று நம்புகிறேன். மிக விரைவில், ஸ்திரத்தன்மை வாய்ந்த முடிவுகளை உருவாக்க நானும், பிரதமர் மோடியும் ஒப்புதல் அளித்துள்ளோம் என்றார்.
நம்முடைய இருதரப்பு வர்த்தக அளவானது, இந்திய பொருளாதாரத்தின் அளவு மற்றும் சக்தி ஆகியவற்றை முழு அளவில் பிரதிபலிக்கும் வகையில் இல்லை. இந்தியாவிடம் வளர்ச்சிக்கான முக்கிய இடம் உள்ளது. அதனால், வருகிற ஆண்டுகளில் நம்முடைய வர்த்தகம் இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கிறேன் என்றார். ஏ.ஐ. மற்றும் மென்பொருள் வளர்ச்சியில் இந்தியா உலக தரத்திலான வலுவுடன் உள்ளது.
கொரியாவோ உற்பத்தி, குறை கடத்திகள், பேட்டரிகள், தானியங்கி துறைகள் மற்றும் கப்பல் கட்டுமானம் ஆகிய துறைகளில் வலுவான திறனுடன் உள்ளது என்று கூறினார். உயர் தொழில்நுட்ப தொழிற்சாலைகளுக்கான திட்டத்தில் வருங்காலத்தில் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார். வலுவான ஒத்துழைப்பே, தற்போதுள்ள உலகளாவிய சூழலில் அவசியம் என்று அவர் கூறியுள்ளார்.
