ஈரான் போர் எதற்கு தொடங்கியது என்று மறந்து, இப்போது “ஹார்முஸ் ஜலசந்தி’யை மையமாக வைத்து தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்தப் போர் தொடங்கியதில் இருந்து மூடப்பட்டிருந்த ஹார்முஸ் ஜலசந்தி, இப்போது திறப்பு… மூடல்… எச்சரிக்கை… ரிப்பீட்டு என்று சென்று கொண்டிருக்கிறது.
ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க ஈரான் புதிய நிபந்தனை ஒன்றை முன்வைத்துள்ளது.
அது என்ன?
ஈரானின் துணை அதிபர் ஆரிஃப், “ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பு என்பது இலவசம் அல்ல. ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கிறார்கள். அதனால், மற்ற நாட்டவர்களின் கப்பல்களுக்கு எங்களின் பாதுகாப்பு இலவசமாகக் கிடைக்கும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது.

ஒன்று, அனைவருக்கும் சுதந்திரமான எண்ணெய் சந்தை இருக்க வேண்டும்… அல்லது அனைவரும் மிகப்பெரிய இழப்புகளைச் சந்திக்க நேரிடும்.
உலகளாவிய எரிபொருள் விலையின் நிலைத்தன்மை என்பது, ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிரான பொருளாதார மற்றும் ராணுவ அழுத்தங்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட… மற்றும் நிரந்தரமான முற்றுப்புள்ளி வைப்பதிலேயே தங்கியுள்ளது” என்று தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தக் கோரிக்கை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

