கோலாலம்பூர்:
சண்டாக்கான், கம்போங் பஹாகியாவில் நிகழ்ந்த பயங்கரத் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய, மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படும் என்று துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அமாட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
“பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை வழங்குவதற்கே தற்போது முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. உணவு, தங்குமிடம் மற்றும் இதர நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதை மத்திய அரசு நேரடியாகக் கண்காணிக்கும்” என்றும், “கண்ணிமைக்கும் நேரத்தில் தங்களின் வீடுகளை இழந்த மக்களின் வேதனை எனக்குப் புரிகிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும், மத்திய பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவருமான அவர், இன்று தனது முகநூல் (Facebook) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தும் வகையில், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களைத் தற்காலிகத் தங்குமிடங்களில் பதிவு செய்யவும், அவர்களுக்கு ஆரம்பகட்ட உதவிகளை வழங்கவும் பத்து சாப்பி (Batu Sapi) பகுதியின் அம்னோ (Umno) தொண்டர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.
அத்தோடு பேரிடர் மேலாண்மைக் குழு, சிவில் பாதுகாப்புப் படை மற்றும் மாநில அரசு முகமைகள் இணைந்து ஒரே மையமாகச் செயல்பட்டு நிவாரணங்களை விநியோகிக்கும் என்றார்.
இன்று அதிகாலை 1:30 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில் சுமார் 1,000 வீடுகள் எரிந்துள்ள நிலையில், மொத்தம் 9,007 குடியிருப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சண்டாக்கான் மாவட்டப் போலிஸ் தலைவர் ஏசிபி ஜார்ஜ் அப்துல் ரக்மான் உறுதிப்படுத்தியுள்ளார். நல்வாய்ப்பாக இதுவரை உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை.
பாதிக்கப்பட்ட மக்கள் இக்கட்டான இந்தச் சூழலை எதிர்கொள்ளத் தேவையான வலிமையைப் பெற அனைவரும் பிரார்த்திப்போம் என்றும் துணைப் பிரதமர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.




