அனுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்தில், இரு பெண்களுக்கு மயக்க மருந்து கலந்த உணவு மற்றும் பானங்களை வழங்கி, அவர்களிடம் இருந்த 17 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், அனுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். இதன்படி, கடந்த 17ஆம் திகதி பண்டுலகம பகுதியில் வைத்து 54 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட பணம் மற்றும் நகைகளின் பெறுமதி 17,06,400 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் ஈடுபடும் போது, அறிமுகமில்லாத நபர்களுடன் ஏற்படும் பழக்கத்தின் அடிப்படையில் அவர்கள் வழங்கும் உணவு அல்லது பானங்களை உட்கொள்ள வேண்டாம் எனப் பொலிஸார் பொதுமக்களை மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளனர்.


