தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் 17 வயதுச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த தெருக்கூத்துக் கலைஞர்கள் மூவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி போக்சோ (POCSO) நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டு மே 24-ஆம் தேதி இரவு, நல்லம்பள்ளி அருகே உள்ள ஒரு கிராமத்தில் தெருக்கூத்து நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைப் பார்க்கச் சென்ற 17 வயதுச் சிறுமி, நிகழ்ச்சி முடிந்து தனியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தச் சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தெருக்கூத்து மேடையில் கலை நிகழ்ச்சிகளை நடத்திய கொல்லாபுரி (65), மணிகண்டன் (55), மற்றும் மஞ்சுநாதன் (33) ஆகிய மூவரும், சிறுமியை வலுக்கட்டாயமாக வயல்வெளிக்கு இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவோம் எனச் சிறுமிக்கு மிரட்டல் விடுத்துத் தப்பியுள்ளனர்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமி, தனது குடும்பத்தினரிடம் நடந்ததைக் கூறவே, தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த மூன்று கலைஞர்களையும் கைது செய்தனர்.
தர்மபுரி போக்சோ நீதிமன்றத்தில் இந்த வழக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. நேற்று (வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 17) இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பளித்த நீதிபதி அசின்பானு: குற்றம் சாட்டப்பட்ட கொல்லாபுரி, மணிகண்டன் மற்றும் மஞ்சுநாதன் ஆகிய மூவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்தார்.
குற்றவாளிகள் மூவருக்கும் தலா ரூ. 50,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
குழந்தைகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் எவராக இருந்தாலும் தப்ப முடியாது என்பதற்கு இந்தத் தீர்ப்பு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.




