கோலாலம்பூர்:
ஈராக்கிலிருந்து ஒரு மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயைச் சுமந்துகொண்டு புறப்பட்ட ‘ஓஷன் தண்டர்’ (Ocean Thunder) எனும் கப்பல், பல்வேறு சவால்களைக் கடந்து இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) சிங்கப்பூர் நீரிணை வழியாக ஜோகூர் மாநிலத்தை வந்தடைந்தது.
பனாமா நாட்டின் கொடியுடன் பயணிக்கும் இந்தக் கப்பல், 274 மீட்டர் நீளம் கொண்டது. இதில் ஈராக்கின் உயர்தர ‘பாஸ்ரா ஹெவி’ (Basra Heavy) கச்சா எண்ணெய் உள்ளது.
மலேசியாவின் பெட்ரோனாஸ் நிறுவனம் நிர்வகிக்கும் பெங்கெராங் ஒருங்கிணைந்த பெட்ரோல் நிலையத்திற்கு (Pengerang Integrated Complex) இந்த எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு இது சுத்திகரிக்கப்பட்டு உயர்தர எரிபொருட்களாக மாற்றப்படும்.
கடந்த மார்ச் மாதம் தனது பயணத்தைத் தொடங்கிய இக்கப்பல், ஏப்ரல் 5-ஆம் தேதி மிக ஆபத்தான ஹோர்முஸ் நீரிணையைக் (Strait of Hormuz) கடந்தது.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக இந்தப் பகுதியில் கப்பல் போக்குவரத்து கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈரான் – இஸ்ரேல் மோதல் சூழலில், உலகளாவிய எரிசக்தி விநியோகப் பாதையில் பெரும் தடைகள் ஏற்பட்டுள்ளன. எனினும், மேற்கொள்ளப்பட்ட அரசதந்திர முயற்சிகளின் பலனாக, ஈராக்கிய எண்ணெயைச் சுமந்து வரும் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி வழங்கியதாகத் தெரிகிறது.
மத்திய கிழக்குப் போர்ச் சூழல் தொடங்கியதிலிருந்து, மலேசியாவுடன் தொடர்புடைய கப்பல்களில் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து வந்துள்ள இரண்டாவது கப்பல் ‘ஓஷன் தண்டர்’ ஆகும். இது விரைவில் பெங்கெராங் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு, எண்ணெய் இறக்கும் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




