Last Updated:
“தொகுதி மறுவரையறை மசோதாவை தோற்கடிப்போம். தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறாது என்பது ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு கூட தெரியும்” என ராகுல் காந்தி பேசியுள்ளார்.
தொகுதி மறுவரையறை மசோதா குறித்து நாடாளுமன்ற மக்களவையில் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “தொகுதி மறுவரையறை மசோதா மூலம் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பறிக்கப்படுகிறது. தொகுதி மறுவரையறை மசோதாவை தோற்கடிப்போம்” என பேசியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தற்போது நாடாளுமன்றத்தில் உள்ள 543 தொகுதிகளின் எண்ணிக்கையை 850ஆக உயர்த்துவதற்கான தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற மக்களவை நேற்று (16ஆம் தேதி) கூடியது.
அதன்படி, தொகுதி மறுவரையறை தொடர்பான 3 மசோதாக்கள் நேற்று விவாதிக்கப்பட்டு, வாக்கு எடுப்பு நடத்தி நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளான இன்றும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்துவருகிறது. இதில், மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நான்கு மணிக்கு நடைபெறுகிறது.
இந்நிலையில் இன்று மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்த மசோதா குறித்து பேசினார். அப்போது அவர் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தார். நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசியதாவது; “தொகுதி மறுவரையறை மசோதா மூலம், இந்தியாவின் தேர்தல் வரைபடத்தை மாற்ற மத்திய அரசு முயற்சி செய்கிறது. மகளிர் மசோதா என திசை திருப்புவதா? தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற அனுமதிக்க மாட்டோம்.
ஓ.பி.சி. மற்றும் பட்டியலினத்தவரை இந்துக்கள் என்கிறீர்கள். ஆனால், அவர்களுக்கு உரிமை தர மறுக்கிறீர்கள். இந்திய சமூகம் ஓ.பி.சி.களையும், தலித் மக்களையும் எப்படி நடத்தியது என அனைவருக்கும் தெரியும். ஜாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் மக்களவையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா 2023ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இது மகளிர் மசோதா கிடையாது. இது காஷ்மீர், அசாமைப் போல தேசிய அரசியல் வரைபடத்தை மாற்ற மத்திய அரசு முயற்சி செய்கிறது. தொகுதி மறுவரையறை மசோதா தேசவிரோதமானது. இதுபோன்ற மசோதாக்களால் தேசம் தாக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.
தொகுதி மறுவரையறை மசோதா மூலம் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பறிக்கப்படுகிறது. இந்த தேச விரோத நடவடிக்கையை கடுமையாக எதிர்ப்போம். தொகுதி மறுவரையறை மசோதாவை தோற்கடிப்போம். தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறாது என்பது ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு கூட தெரியும்” இவ்வாறு பேசினார்.


