Last Updated:
கர்நாடக பெலகாவியில் காதலனுடன் ஓடிய சத்யவ்வாவை குடும்ப கௌரவம் காரணமாக தந்தை அண்ணன் மைத்துனர் விஷம் குடிக்க வைத்து கொலை செய்து எரித்தது, மூவர் கைது.
கர்நாடகாவில் கணவனை விட்டுப் பிரிந்து காதலனுடன் ஓடிய இளம்பெண்ணைக் கொடூரமாகக் கொலை செய்து எரித்த குடும்பத்தினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சத்யவ்வா. இவர், சந்தோஷ் என்பவரைத் திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இதனிடையே சத்யவ்வாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணா என்பவருடன் திருமணத்தை மீறிய உறவில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இருவரின் தகாத உறவும் குடும்பத்தினருக்குத் தெரியவந்துள்ளது. இதனால் சத்யவ்வாவை குடும்பத்தினர் கடுமையாக கண்டித்துள்ளனர்.
இருப்பினும் கிருஷ்ணாவுடனான பழக்கத்தை அவர் தொடர்ந்துள்ளார். ஒருகட்டத்தில் வீட்டை விட்டு அவருடன் சென்று விட்டார். இருவரும் தலைமறைவாக சில மாதங்கள் வாழ்ந்தனர். சத்யவ்வா இப்படி செய்து விட்டாரே என அவரது கணவன் கடும் சோகத்தில் மூழ்க மகள் இப்படிச் செய்து விட்டாரே என அவரது தந்தை கடும் ஆத்திரத்திலிருந்துள்ளார். இதற்கு நடுவெ மகள் எங்கோ காணாமல் போனதாகப் போலீசில் புகார் அளித்தும் தேடி வந்தனர்.
இதற்கிடையே மூன்று மாதங்களுக்குப் பிறகு மார்ச் 13ஆம் தேதி சத்யவ்வாவை அவரது குடும்பத்தினர் கண்டுபிடித்ததாக தெரிகிறது. மகாராஷ்டிரா அருகே அவரது உறவினர் ஊரில் வாழ்ந்து வந்ததாகவும் தெரிகிறது. அதை கண்டுபிடித்த குடும்பத்தினர் பேச்சு வார்த்தைக்கு என அழைத்து சென்று சாதி வேறுபாடுகளைச் சுட்டிக்காட்டி கிருஷ்ணாவுடனான உறவை முறித்துக்கொள்ளுமாறு வற்புறுத்தியதாக தெரியவந்தது. பலமுறை எச்சரித்தும், சத்யவ்வா அந்த உறவைத் தொடர்வதிலேயே உறுதியாக இருந்தார்.
இந்நிலையில், அப்பெண்ணின் இந்த உறுதியான நிலைப்பாட்டைக் கண்டு ஆத்திரமடைந்த குடும்பத்தினர், இதனைத் தங்கள் குடும்ப கௌரவத்திற்கு ஏற்பட்ட களங்கமாகவே கருதினர். அதனால் ஒருகட்டத்தில் மகளைக் கொலை செய்து விடலாம் என தந்தை, அண்ணன், மைத்துனர் என ஒட்டுமொத்த குடும்பமும் கொடூர முடிவெடுத்துள்ளனர். மேலும் மார்ச் 21ஆம் தேதியன்று அப்பெண்ணின் மாமா பிரகாஷ் பீமப்பா, சகோதரர் ஷனூர் சதாசிவ் மற்றும் மைத்துனர் மொராபாத் கல்லப்பா ஆகிய மூவரும் சேர்த்து, அப்பெண்ணை வலுக்கட்டாயமாக விஷம் அருந்தச் செய்ததாகக் கூறப்படுகிறது.
அதில் சத்யவ்வா துடிதுடித்து உயிரிழந்தார். பதைபதைக்க வைக்கும் இக்கொலையில் குற்றத்திற்கான தடயங்களை அழிக்கும் நோக்கில், அம்மூவரும் அப்பெண்ணின் உடலை அப்பகுதியில் உள்ள ஒரு சுடுகாட்டில் வைத்துத் தகனம் செய்தனர். அப்போதுதான் சத்யவ்வா காணாமல் போனது குறித்து கிருஷ்ணா, பெலகாவியில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து போலீசார் விசாரணையில் இறங்கி இச்சம்பவத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
கொல்லப்பட்ட அப்பெண்ணின் தாயார் அளித்த வாக்குமூலத்திலேயே கொலையாளிகள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைக்குப் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தகாத உறவால் கணவனை விட்டு பிரித்த மகளை, பெற்ற தந்தையை மகனுடன் சேர்ந்து விஷம் குடிக்க வைத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

