இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “TCS-இன் தலைவர் மற்றும் COO ஆன ஆர்த்தி சுப்ரமணியன் தலைமையில் நடைபெறும் உள்விசாரணைக்கு, சுயாதீன ஆலோசகர்களாகச் செயல்பட, Deloitte நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர் குழுக்களையும், புகழ்பெற்ற சட்ட நிறுவனமான Trilegal-ஐயும் நாங்கள் நியமித்துள்ளோம்.
TCS-இன் சுயாதீன இயக்குநரான Keki Mistry தலைமையில், ஒரு மேற்பார்வைக் குழுவை நாங்கள் அமைத்துள்ளோம். உள்விசாரணையின் முடிவுகள் மேற்பார்வைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்படும்; அக்குழு அவற்றை ஆய்வு செய்து, ஏதேனும் பரிந்துரைகள் இருப்பின் அவற்றைச் செயல்படுத்தும்.
மேலும், சில உண்மைகளை நாங்கள் ஆவணப்படுத்த விரும்புகிறோம்: ஊடகங்களில் தொடர்ந்து TCS-இன் மனிதவள மேலாளராக (HR Manager) குறிப்பிடப்பட்டு வரும் Nida Khan, உண்மையில் மனிதவள மேலாளர் அல்ல. மேலும், பணியமர்த்தல் தொடர்பான பொறுப்புகளையும் அவர் வகிக்கவில்லை. அவர் செயல்முறை உதவியாளராகவே பணியாற்றினார். அவருக்கு எவ்விதமான தலைமைப் பொறுப்புகளும் வழங்கப்பட்டிருக்கவில்லை.
நாசிக்கில் அமைந்துள்ள எங்கள் கிளை தொடர்ந்து இயங்கி வருகிறது; எங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து சேவையாற்றி வருகிறது. அக்கிளை மூடப்பட்டுவிட்டதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை.
விரிவான ஆய்வுகள் இன்னும் நடைபெற்று வரும் நிலையில், நாசிக் கிளை தொடர்பான அமைப்புகள் மற்றும் ஆவணங்களின் மீதான ஒரு பூர்வாங்க ஆய்வு, பின்வரும் உண்மையைச் சுட்டிக்காட்டுகிறது: தற்போது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் போன்ற தன்மையிலான புகார்கள் எதுவும், எங்கள் நெறிமுறைகள் சார்ந்த வழிமுறைகள் மூலமோ அல்லது பணியிடப் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சார்ந்த வழிமுறைகள் மூலமோ எங்களுக்குக் கிடைக்கப்பெறவில்லை.
ஊழியர்களின் நலன் மற்றும் நிறுவன நடத்தை ஆகியவற்றில் மிக உயர்ந்த தரநிலைகளை TCS கடைப்பிடித்து வருகிறது. ஒவ்வொரு ஊழியரின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றில் நாங்கள் முழுமையாக உறுதியுடன் இருக்கிறோம். நாங்கள் முன்பே குறிப்பிட்டது போல, எந்தவொரு வடிவத்திலான கட்டாயப்படுத்தல் அல்லது முறைகேடுகளையும் நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம் (Zero-tolerance policy). எங்கள் ஊழியர்களுக்குத் துணை நிற்பதிலும், எங்கள் அனைத்து அலுவலகங்களிலும் பாதுகாப்பான மற்றும் கண்ணியமான ஒரு பணியிடச் சூழலை உறுதி செய்வதிலும் நாங்கள் முழு கவனம் செலுத்தி வருகிறோம்.
இவ்விவகாரம் முழுமையாகவும், வெளிப்படையாகவும் விசாரிக்கப்பட்டு, அதற்குரிய நியாயமான தீர்வு எட்டப்படுவதை உறுதி செய்யும் வகையில், சட்ட அமலாக்க முகமைகளுக்கு நாங்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

