Courtesy: Kabil
வவுனியாவில் 3354வது நாளாக போராட்டம் நடத்தி வரும்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள், பல ஆண்டுகளாக உண்மை, நீதி, பதில்
ஆகியவற்றை வழங்கத் தவறியுள்ளதாக கூறி இலங்கையின் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் (OMP)
மீது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
இதன்படி இதற்கு உடனடி சர்வதேச விசாரணையை கோரியுள்ளனர்.
இது தொடர்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்
சங்கம் இன்று நடத்திய ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட
சங்கத்தின் செயலாளர் கோ. ராஜ்குமார்,
வேதனையான தகவல்கள்
“பல ஆண்டுகளாக, தமிழர் குடும்பங்கள், குறிப்பாக தாய்மார்கள், அதிகாரிகளால்
மீண்டும் மீண்டும் அழைக்கப்பட்டு, தங்கள் காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகள்
பற்றிய அதே வேதனையான தகவல்களை மீண்டும் சொல்லத் திணிக்கப்படுகின்றனர்.

இந்த
செயல்முறை எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, இது அவர்களின் மன
உளைச்சலை மேலும் அதிகரித்து, தீர்வு இல்லாத ஒரு சுற்று முறையாக மாறியுள்ளது.
நாங்கள் எங்கள் கதைகளை எண்ணற்ற முறை கூறியுள்ளோம். பெயர்கள், திகதிகள்,
ஆதாரங்கள் அனைத்தையும் கொடுத்துள்ளோம்.
எந்த பதிலும் இல்லை
ஆனால் எங்களுக்கு மீண்டும் அழைப்பு,
அதே கேள்விகள், எந்த பதிலும் இல்லை. இது விசாரணை அல்ல. இது காலம் கடத்தல். போரின் முடிவிற்கு பத்தாண்டுகள் கடந்தும், ஆயிரக்கணக்கான தமிழர் குடும்பங்கள்
தங்கள் அன்புக்குரியவர்களை தேடிக்கொண்டே உள்ளனர்.
உள்நாட்டு அமைப்புகள்
உருவாக்கப்பட்டிருந்தாலும், நம்பகமான பொறுப்பேற்பும் இல்லை,
வெளிப்படைத்தன்மையும் இல்லை, உண்மையான முன்னேற்றமும் இல்லை.
இதனால், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள் தெளிவாக அறிவிக்கின்றனர்.
உள்நாட்டு விசாரணை அமைப்புகளில் எங்களுக்கு இனி நம்பிக்கை இல்லை.
இப்போதைய அமைப்பு உண்மையை கண்டறிவதற்காக அல்ல, பாதிக்கப்பட்டவர்களை சோர்வடையச்
செய்யும் நோக்கத்துடன் செயல்படுகிறது என்று நாங்கள் நம்புகிறோம்” என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

