Last Updated:
ஆக்ராவில் முதலிரவில் மணமகள் 90 லட்சம் கேட்டு மிரட்டி, கியாஸ் சிலிண்டர் திறந்து கணவன் குடும்பத்தைக் கொல்ல முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணம் கேட்டு பெண் மிரட்டியதற்கு என்ன காரணம்?
உத்தரப் பிரதேசம் மாநிலம், ஆக்ராவில் முதலிரவில் தன்னை தொட வேண்டுமானால் 90 லட்ச ரூபாய் வேண்டும் என கேட்டு, மணமகனை மிரட்டிய பெண், கேஸ் சிலிண்டரை திறந்து விட்டு அவரை கொல்ல முயன்றுள்ளார்.
டெல்லி, ஆக்ராவின் ஜெகதீஷ்புராவைச் சேர்ந்த இளைஞருக்கும், ஹத்ராஸ் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும், இருவீட்டார் சம்மதத்துடன் சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. சடங்குகள் முடிந்து மணமகள் புகுந்த வீட்டுக்குச் செல்ல, அன்றிரவு முதலிரவுக்கு ஏற்பாடுகள் நடந்துள்ளது.
அறைக்குள் சென்றதும் தனக்கு இப்போதே, 90 லட்சம் ரூபாய் ரொக்கமாக வேண்டும்; அதைக் கொடுத்தால் மட்டும் தன்னை தொட அனுமதிக்க முடியும் என மணமகள் மிரட்டியுள்ளார். அதை கேட்டதும் மணமகன் அதிர்ச்சி அடைந்தார்.
தாலி கட்டி மனைவியைத் தொட 90 லட்சமா? எதற்காக நான் பணம் கொடுக்க வேண்டும் என கேட்டு மணமகன் அப்பெண்ணை எதிர்க்க, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சத்தம் கேட்டு வந்த மாமியாரிடமும் அப்பெண், பணத்தைக் கேட்டு நிபந்தனை விதித்துள்ளார்.
எவ்வளவோ சமாதானம் செய்ய முயன்றும், அப்பெண் தனது நிலைப்பாட்டில் மாறாமல் இருந்துள்ளார். இதற்கு நடுவே தனது குடும்பத்தினருக்கு போன் செய்து வரவழைத்து பிரச்சினையைப் பெரிதாக்கிய பெண், கணவன் குடும்பத்தினரை தனது உறவினர்களை ஏவி தாக்க வைத்துள்ளார்.
மேலும் வீட்டின் உள்ளே வைத்துப் பூட்டி, கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டு கணவனை அவரது குடும்பத்தோடு கொல்ல முயன்றுள்ளார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் பின்பக்க கதவு வழியாக தப்பியோடி உயிரைக் காப்பாற்றிக்கொண்டனர்.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாகப் போலீசில் புகார் அளிக்க, மணமகளையும் அவரது குடும்பத்தினரையும் பிடித்து போலீசார் விசாரித்துள்ளனர். தனக்கு இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை என்றும் பணத்திற்காக மட்டுமே சம்மதித்ததாகவும் அப்பெண் கூறியுள்ளார்.
இருப்பினும் மணமகன் வீட்டாரை தாக்கியதால் பெண் வீட்டார் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து ஓடும்போது மணமகன் வீட்டு நகைகளையும், அப்பெண் கொள்ளையடித்து சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.
அதில் பணத்திற்காகத் திருமணம் செய்து மிரட்டியது உறுதியானால் மணப்பெண் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் உரிய நடவடிக்கை பாயும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


