Last Updated:
பெங்களூரு நெலமங்கலாவில் ஜிம் மாஸ்டர் திலீப், ரகசிய காதலி யோகிதா பணம் சொத்து டார்ச்சர் செய்ததாக கூறி வீடியோ கால் வைத்தபடி தூக்கிட்டு தற்கொலை, போலீஸ் விசாரணை.
பெங்களூருவில் ஜிம் மாஸ்டர் ஒருவர் தனது ரகசிய காதலிக்கு வீடியோ கால் போட்டுவிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள நெலமங்கலா பகுதியைச் சேர்ந்தவர் திலீப். 28 வயது பாடி பில்டரான இவர் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்றுள்ளார். இதையடுத்து தனது வீட்டின் அருகே உடற்பயிற்சிக் கூடம் திறந்து ஜிம் மாஸ்டராக இருந்து வந்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திலீப்பின் ஜிம்மிற்கு, 42 வயதான யோகிதா என்பவர் வந்துள்ளார்.
திருமணமாகி குழந்தை உள்ள நிலையில் தனது உடலை கட்டுக்கோப்பாக வைக்கும் நோக்கில் உடல் பயிற்சி கூடத்திற்கு அவர் சென்றுள்ளார். தொடர்ந்து ஜிம்முக்கு வந்த யோகிதா, மாஸ்டருடன் நன்கு பழகியுள்ளார். இவர்களின் பழக்கம் நாளடைவில் திருமண பந்தத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இருவரும் ஜோடியாக பல்வேறு இடங்களுக்கு சென்று வந்த நிலையில், ஓராண்டுக்கு முன்பு யோகிதா தனது வேலையை காட்ட ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.
ஜிம் மூலம் நன்கு வருமானம் வருவதை பார்த்த யோகிதா, அடிக்கடி பணம் கேட்டு திலீப்பிற்கு நெருக்கடி கொடுத்துள்ளார். தொடர்ந்து பணம் கேட்டு டார்ச்சர் செய்ததால் விவகாரம் காவல் நிலையம் வரை சென்றுள்ளது. பின்னர், இரு தரப்பினரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும் பெண்ணின் கணவர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, இனி ஒருவருக்கொருவர் சந்திக்க கூடாது என்று இருவரிடமும் எழுதி வாங்கியுள்ளனர்.
இந்த நிலையில் வெளியே சென்ற திலீப் இரவு 11.30 மணியளவில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். வந்த உடனே மேல் மாடியில் உள்ள தனது அறைக்கு சென்றுள்ளார். வீட்டில் இருந்தவர்கள் இரவு உணவு அருந்த தந்தை அழைத்தபோதும் மறுத்துவிட்டு உள்ளே சென்றுள்ளார். சிறிது நேரத்தில் வீட்டில் இருந்த திலீப்பின் சகோதரி வினுதாவுக்கு, யோஹிதா ஹாய் மேசேஜ் அனுப்பியுள்ளார். அதற்கு எந்த பதிலும் வராததால், போன் செய்து உங்கள் சகோதரனை பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
என்ன பிரச்சினை என்று கேட்டதும், அவர் கடந்த மூன்று நாட்களாக எதுவும் சாப்பிடவில்லை என யோகிதா தெரிவித்துள்ளார். அத்துடன், மின் விசிறியில் ஒரு துணியைக் கட்டிக்கொண்டு தனக்கு வீடியோ காலில் பேசியதாக கூறி குண்டை தூக்கிப் போட்டுள்ளார். பதறியடித்துக் கொண்டு திலீப்பின் சகோதரி தனது சந்தையிடம் கூறியுள்ளார். அவர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே பார்த்தபோது திலீப் தூக்கில் தொங்கியபடி கிடந்துள்ளார்.
அதைக் கண்டு ஒட்டுமொத்த குடும்பத்தினரும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். உடனே அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், ஜிம் மாஸ்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். தொடர்ந்து திலீப்பின் பெற்றோர் அவரது ரகசிய காதலி யோகிதா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதில், ஏற்கனவே திருமணமான பெண். தொடர்ந்து பணம் கேட்டு திலீப்பை மிட்டியதாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், வீட்டை அவரது மகன் பெயரில் எழுதிக் கொடுக்க கூறி யோகிதா டார்ச்சர் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அடிக்கடி பணம் மற்றும் சொத்தைக் கேட்டு மிரட்டியதால் விரத்தியடைந்த திலீப் விபரீத முடிவு எடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், திலீப்பின் செல்போனை கைப்பற்றி அதில் உள்ள வீடியோக்கள் மற்றும் உரையாடல்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
விசாரணை முடிவில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். ரகசிய காதலி கொடுத்த டார்ச்சர் தாங்க முடியாமல் ஜிம் மாஸ்டர், வீடியோ கால் பேசியபடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Bangalore,Karnataka


