யாழ். தையிட்டி பகுதியில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், அங்கு சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையைத் தக்கவைக்க முயற்சிகள் நடப்பதாகத் தெரிவித்து மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை (11.04) தையிட்டிக்கு விஜயம் செய்திருந்த அமைச்சர் சந்திரசேகரன், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை முறையாக அளவீடு செய்து உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.
இரகசிய முயற்சி
இருப்பினும், நிலங்கள் விடுவிக்கப்படும் என்று கூறப்பட்டாலும், சர்ச்சைக்குரிய விகாரை மற்றும் அது அமைந்துள்ள காணி குறித்து எந்தவொரு தெளிவான முடிவும் அறிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

மறுபுறம், அந்தச் சட்டவிரோத விகாரையை அரச திணைக்களங்களில் முறைப்படி பதிவு செய்வதற்கான இரகசிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
விசேட கலந்துரையாடல்
இந்த நிலையில், அரசின் இந்த இரட்டை வேடத்தைப் புரிந்துகொள்வதற்கும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர் நிலங்களை முழுமையாக மீட்டெடுப்பதற்கான அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆராயவும் விசேட கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது, யாழ். மத்திய கல்லூரிக்கு அருகாமையில் உள்ள தந்தை செல்வா அரங்கத்தில் எதிர்வரும் 15 ஆம் திகதி புதன்கிழழை மாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு நில மீட்புப் போராட்டத்திற்கு வலு சேர்க்குமாறு தையிட்டி ஆக்கிரமிப்பு விகாரையினால் நிலமிழந்த தமிழர்கள் சார்பாகப் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

