அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் லியோ XIV-ஐ கடுமையாக விமர்சித்துத் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், போப் லியோ “குற்றவாளிகளைத் தட்டிக்கேட்கத் துணிவற்றவர்” என்றும், “வெளியுறவுக் கொள்கையில் கோட்டை விடுபவர்” என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
போப் லியோ XIV அண்மையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

“அதிகார மதம் மற்றும் போரின் வெறித்தனம் உலகை அழிக்கும்” என்று அவர் எச்சரித்திருந்தார்.
கொரோனா காலகட்டத்தில் தேவாலயங்கள் மூடப்பட்டதையும், பாதிரியார்கள் மற்றும் மத குருக்கள் கைது செய்யப்பட்டதையும் போப் லியோ கண்டிக்கவில்லை என்று ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
“அன்று திருச்சபை அனுபவித்த பயத்தைப் பற்றி பேசாத போப், இப்போது எனது நிர்வாகத்தைப் பார்த்து பயப்படுவதாகக் கூறுவது வேடிக்கையானது” என்று ஆவேசமாகப் பதிவிட்டுள்ளார்.
மேலும், ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதை போப் மறைமுகமாக ஆதரிப்பதாகவும், அமெரிக்காவிற்குப் போதைப் பொருட்களை அனுப்பி வந்த வெனிசுலா மீது எடுத்த நடவடிக்கையை அவர் விமர்சிப்பது முறையல்ல என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
“நான் அமெரிக்காவின் பாதுகாப்பிற்காகச் செயல்படுகிறேன், ஆனால் போப் அரசியல்வாதியாக மாறி இடதுசாரிகளுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்” என்று சாடியுள்ளார்.
வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு அமெரிக்கர் போப்பாக நியமிக்கப்பட்டதன் பின்னணியில் அரசியல் இருப்பதாக ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். “என்னைச் சமாளிக்கவே வாட்டிகன் இவரைத் தேர்வு செய்துள்ளது” என்று ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.
