கோலாலம்பூர், ஏப்ரல் 12:
‘லக்கி டிரா’ (Lucky Draw) மூலம் பரிசு விழுந்திருப்பதாகக் கூறி, 78 வயது மூதாட்டி ஒருவரிடமிருந்து சுமார் 307,000 ரிங்கிட் பணத்தை மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி, காண் (Gan) என்ற மூதாட்டி சந்தைக்குச் சென்றபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரை அணுகியுள்ளார். தான் அவரிடம் முன்பு பழங்கள் வாங்கிய வாடிக்கையாளர் என்று கூறி நம்பிக்கையை ஏற்படுத்திய அந்த நபர், மூதாட்டிக்கு வங்கியில் 200,000 ரிங்கிட் பரிசு விழுந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
பரிசுத் தொகையைப் பெறுவதற்கான ஆவணங்களை எடுப்பதற்காக வீட்டிற்குச் செல்ல வேண்டும் எனப் போலியான தகவலைக் கூறி, அந்த மூதாட்டியைத் தனது காரில் ஏற்றிக்கொண்டு சென்றான். காரில் அந்த நபர் மற்றும் மற்றொரு ஓட்டுநர் இருந்ததாக மூதாட்டி தெரிவித்தார்.
கார் பயணத்தின்போது, மூதாட்டி ஒருவித மயக்க நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. சந்தேக நபர்கள் தொடர்ந்து புகைபிடித்தபடியே இருந்ததோடு, வங்கி மேலாளருடன் பேசுவது போலவும், பரிசுத் தொகையைப் பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வது போலவும் மலாய் மொழியில் தொலைபேசியில் பேசியுள்ளனர்.
இந்த ஏமாற்று வேலையில் சிக்கிய மூதாட்டி, நெம்பாவ் மற்றும் செனவாங் பகுதிகளில் உள்ள மூன்று வெவ்வேறு வங்கிகளுக்குச் சென்று, தனது சேமிப்பு மற்றும் நிலையான வைப்பு நிதிகளை (Fixed Deposits) எடுத்து மொத்தம் 307,000 ரிங்கிட் பணத்தை அந்த நபர்களிடம் ஒப்படைத்துள்ளார். இதில் 7,000 ரிங்கிட் அவரது கைப்பையில் இருந்த ரொக்கப் பணமும் அடங்கும்.
மூதாட்டியின் மகன் லிம் (Lim) கூறுகையில், “மதியம் 1:30 மணிக்கு என் தாயாரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, அவர் நண்பருடன் தேநீர் அருந்துவதாகக் கூறினார். ஆனால், அது மோசடி கும்பல் அவருக்குச் சொல்லிக் கொடுத்த வசனம் என்பது பின்னர் தான் தெரிந்தது. மாலை 3 மணிக்கு என் தாயார் போன் செய்து, தான் ஏமாற்றப்பட்டுவிட்டதாக அழுதபடி தெரிவித்தார்,” என்று வருத்தத்துடன் கூறினார்.
வங்கி ஊழியர்கள் இந்த நபர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்தும், மூதாட்டி மிகுந்த பதற்றத்தில் இருந்ததால் மோசடி நடந்ததை அவர்களால் தடுக்க முடியவில்லை.
இந்தச் சம்பவம் தொடர்பாக குடும்பத்தினர் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். பெக்கோக் சட்டமன்ற உறுப்பினர் டான் சோங் (Tan Chong) முன்னிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாதிக்கப்பட்ட மூதாட்டியின் குடும்பத்தினர், இதுபோன்ற பரிசுத் திட்டங்கள் குறித்த கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்.
முதியவர்கள் மற்றும் அறிமுகமில்லாத நபர்களை நம்பிச் செல்லும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.




