Last Updated:
வனவிலங்கு பாதுகாப்பின் எதிர்காலம், நாம் அடுத்த தலைமுறைக்கு வழங்கும் அன்பு, அறிவு மற்றும் திறன்களைப் பொறுத்தே அமையும் என்று ஆனந்த் அம்பானி குறிப்பிட்டுள்ளார்
ரிலையன்ஸ் குழுமத்தின் ஆனந்த் அம்பானி, தனது பிறந்தநாளை முன்னிட்டு குஜராத்தின் ஜாம்நகரில் ‘வந்தாரா பல்கலைக்கழகம்’ அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டியுள்ளார். இது வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் கால்நடை மருத்துவ அறிவியலுக்காக (Wildlife Conservation and Veterinary Science) பிரத்யேகமாக அர்ப்பணிக்கப்பட்ட உலகின் முதல் பல்கலைக்கழகம் என்ற பெருமையைப் பெறுகிறது.
இது ஆனந்த் அம்பானியின் லட்சியத் திட்டங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அடிக்கல் நாட்டு விழாவிற்காக விந்திய மலைத்தொடரின் அடையாளமான ‘பிஜோலியா மணற்கற்கள்’ பயன்படுத்தப்பட்டன.
மேலும், இந்தியாவின் செழுமையான பல்லுயிர் பெருக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இமயமலைச் சிகரங்கள், காடுகள், புல்வெளிகள் மற்றும் சதுப்புநிலங்கள் போன்ற நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட மண், கல் மற்றும் நீர் இந்த அடிக்கல் நாட்டு விழாவிற்கு கொண்டு வரப்பட்டது.
வந்தாரா பல்கலைக்கழகத்தை வெறும் ஒரு கட்டிடமாகவோ அல்லது உள்கட்டமைப்பாகவோ பார்க்காமல், ஒரு பெரும் “திறன் மேம்பாட்டு மையமாக” உருவாக்குவதே எனது நோக்கம்.
இந்த உலகிற்காகச் சிறந்த கால்நடை மருத்துவர்களையும், விஞ்ஞானிகளையும் உருவாக்க நாங்கள் விரும்புகிறோம். இதன் மூலம் வனவிலங்கு ஆரோக்கியம், நோய் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு அறிவியலில் உலகளவில் நிலவும் நிபுணத்துவ இடைவெளியைக் குறைக்க திட்டமிட்டுள்ளோம்.
தற்போது அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் அழுத்தங்கள், பல்லுயிர் பெருக்க இழப்பு மற்றும் பல்வேறு இனங்களிடையே பரவும் நோய்கள் போன்ற சவால்களுக்கு ஒரு தீர்வாகவே இத்தகைய கல்வி நிறுவனம் தேவைப்படுகிறது. என்று தெரிவித்தார்.
வந்தாரா (Vantara) என்பது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளை ஆகியவற்றின் ஆதரவுடன், குஜராத்தின் ஜாம்நகரில் உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய வனவிலங்கு மீட்பு, மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு திட்டமாகும். இது ஆனந்த் அம்பானியின் கனவுத் திட்டமாக கருதப்படுகிறது.
ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் சுத்திகரிப்பு வளாகத்திற்குள் சுமார் 3,000 ஏக்கர் பரப்பளவில் இது அமைந்துள்ளது. இது காடு போன்ற இயற்கை சூழலை விலங்குகளுக்காக உருவாக்கித் தந்துள்ளது.
இங்கு இந்தியா மட்டுமல்லாமல் மெக்சிகோ, வெனிசுலா போன்ற நாடுகளிலிருந்தும் விலங்குகள் மீட்கப்பட்டு கொண்டுவரப்பட்டுள்ளன. ஏறக்குறைய 2,000-க்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் இந்த பாதுகாப்பான சூழலில் தற்போது வாழ்ந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Apr 12, 2026 11:45 AM IST
ஆனந்த் அம்பானியின் லட்சியத் திட்டம்.. வந்தாராவில் அமைகிறது வனவிலங்குகள் ஆய்வு பல்கலைக் கழகம்..


