பாசிர் மாஸ், ஏப்ரல் 12:
கிளந்தானில் உள்ள கம்போங் குபாங் கடோங் (Kampung Kubang Gadong) பகுதியில் பொது நடவடிக்கை படையினர் (GOF) மேற்கொண்ட அதிரடி சோதனையில், சுமார் 80,000 ரிங்கிட் மதிப்புள்ள 8,000 யாபா (Yaba) மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கோலாலம்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட ஒன்பதாவது பட்டாலியனின் அதிரடிப் படையினர், ‘ஓப் தாரிங் வவாசன் கெலந்தான்’ (Op Taring Wawasan Kelantan) என்ற பெயரில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் இந்தச் சோதனையை மேற்கொண்டனர். இப்பகுதியில் இடம்பெறும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் நடவடிக்கைகள் குறித்த ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
சம்பவ இடத்தைக் கண்காணித்த குழுவினர், அங்குள்ள ஒரு பாமாயில் தோட்டத்தில் நீல நிறத்திலான ஒரு கைப்பையை (Sling bag) கண்டெடுத்தனர். சுமார் 30 நிமிடங்கள் தூரத்தில் மறைந்திருந்து கண்காணித்த பிறகும், அந்தப் பையை உரிமை கோர யாரும் வராததால், படையினர் அதனைச் சோதனையிட்டனர். பைக்குள் 8,000 யாபா மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தச் சோதனையின் போது எவரும் கைது செய்யப்படவில்லை.
இருப்பினும் இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகள், மேல் விசாரணைக்காக பாசிர் மாஸ் மாவட்ட போதைப்பொருள் குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பாக 1952-ஆம் ஆண்டு அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39பி-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
உள்ளூர் பகுதிகளில் விநியோகம் செய்வதற்காகவே இந்த போதை மாத்திரைகள் கடத்தப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.




