போர்க்களத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனைக் கண்ட உலகம், ஒளியூடகங்கள் வழியாக அத் தலைவனின் வீரச் சிரிப்பையும் இராஜதந்திர முகத்தையும் கண்டது.
ஒடுக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய ஒப்பற்ற விடுதலை இயக்கத்தின் பெருந்தலைவனைக் காண அன்றொருநாள் கிளிநொச்சி நகரில் ஊடகங்கள் குடிகொண்டன.
காவியங்களில் படித்த தலைவரை, களத்தின் வீரக் கதைகளில் கேட்ட தலைவரை காணுகின்ற ஆவல் இல்லாதவர்கள் யார்தான்? உலகில் தலைவர் ஒருவரைக் காண ஊடகங்கள் பெருகிக் குழுமிய நாள் எனில் அன்றுதான்.
தலைவனைக் காணத் திரண்ட ஊடகங்கள்
ஆம், 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் திகதி, ஈழத் தமிழர்களின் அரசியல் வரலாற்றில் அதியற்புதமானவொரு நாள் ஆயிற்று. அன்றைய தினம் கிளிநொச்சி, நகரம் ஒரு சாதாரண நகரமாகவன்றி, உலகின் கவனம் திரண்ட அரசியல் மையமாக மாறியது.
சிங்கள ஊடகங்கள் முதல் இந்திய மற்றும் சர்வதேச ஊடகங்கள் வரை நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் ஒரே இடத்தில் கூடினர்.
ஒரு தமிழர் தலைவனின் பேச்சை நேரடியாகக் கேட்கக் காத்திருந்தனர்.
இலங்கை வரலாற்றில் ஒரே நிகழ்விற்காக இத்தகைய பரவலான ஊடகச் சேர்க்கை முன்பு நிகழாத ஒன்று. அதைவிடவும் மற்றொரு சிறப்பும் இந்த நிகழ்வுக்கு இருக்கிறது.
இலங்கையின் ஆட்சியாளர்கள் நடத்திய ஊடகச் சந்திப்புகளிலும்கூட இப்படியாக ஊடகங்கள் திரண்டு கூடியிருக்கவில்லை என்பதை ஶ்ரீலங்கா சிங்கள ஊடகங்களே பதிவு செய்திருந்தும் இங்கு குறிப்பிடாக வேண்டும். எம் தலைவனின் கருத்துக்கள், புகைப்படங்கள் சிங்கள ஊடகங்களை முழுமையாக நிரப்பின.
உலகத் தொலைக்காட்சிகளில் தலைவனின் முகம் பிரகாசித்தது.
வழி திறந்தது
இச்செய்தியாளர் சந்திப்பு இடம்பெறுவதற்கு முன்பாக வடக்கு மற்றும் தெற்கை இணைக்கும் ஏ9 நெடுஞ்சாலை மிக நீண்ட காலத்தின் பின்னர் திறந்து வைக்கப்பட்ட மற்றொரு நிகழ்வும் இடம்பெற்றது.
இது ஒரு போக்குவரத்து வசதி மட்டுமல்லாமல், அரசியல் மற்றும் உளவியல் ரீதியாகவும் முக்கியமான சமிக்ஞையாக அமைந்தது.
போரினால் மூடப்பட் இந்த வீதியினால் ஈழ மக்கள் சந்தித்த அவலங்கள் கொஞ்சமல்ல. இந்த திறப்பு, வடக்கில் நடைபெறும் நிகழ்வை உலகளாவிய அளவில் அணுகக்கூடியதாக்கி, தமிழர் அரசியல் உரையாடலை ஒரு திறந்த மேடைக்கு கொண்டு வந்தது.
இதற்கு முன், தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாடுகள் பெரும்பாலும் மாவீரர் நாள் உரைகள் மூலமே உலகிற்கு சென்றடைந்தன.
ஆனால் இந்த மாநாடு, அந்த ஒரே வழிமுறையை மாற்றி, நேரடி கேள்வி-பதில் வடிவில் உலக ஊடகங்களுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பை உருவாக்கியது. பத்திரிகையாளர்கள் தங்களது சந்தேகங்களை நேரடியாக முன்வைத்து விளக்கம் பெறும் இந்த சந்திப்பு, அரசியல் தொடர்பின் புதிய பரிமாணத்தை உருவாக்கியது.
அமைதியான குரலில் வெளிப்பட்ட அரசியல்
இந்த மாநாடு நடைபெற்ற காலம், உலக அரசியல் மாற்றங்களால் நிர்ணயிக்கப்பட்டது. குறிப்பாக 2001 செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு, ஆயுதப் போராட்டங்களை உலகம் வேறுபட்ட பார்வையில் அணுகத் தொடங்கியது.
அதனை விடுதலைப் புலிகளம் இயக்கம் நன்கு உணர்ந்திருந்தது. அதே சமயம் இலங்கையில் போர் நிறுத்த ஒப்பந்தமும் பேச்சுவார்த்தை சூழலும் உருவாகியிருந்தது. இவ்விரண்டு சூழல்களும் இணைந்து, இந்த ஊடகச் சந்திப்பிற்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்தியது.
இந்த நிகழ்வில் தலைவர் பிரபாகரனின் பேச்சு நடை மற்றும் பதிலளிக்கும் விதம் உலக ஊடகங்களை மிகவும் ஈர்த்தது. உணர்ச்சி வசப்படாமல், தெளிவான மற்றும் சமநிலையான அணுகுமுறையுடன் தலைவர் அவர்கள் கருத்துகளை பகிர்ந்தார்.
இதன் மூலம், ஒரு ஆயுதப் போராட்ட இயக்கத் தலைவராக மாத்திரமின்றி ஈழத் தமிழினத்தின் முகவரியாய் பெருந்தலைவனாய் தென்பட்டார்.
பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தாலும் சமாதான முயற்சிகளைத் தொடர்வோம் என்ற அவரது பதில், அந்த நேரத்தில் நிலவிய பதற்றத்தை குறைக்கும் வகையில் இருந்தது.
அதேபோல் உள்நாட்டு அரசியல் குறித்து பேசும்போது அவர் எடுத்துக் கொண்ட கவனமான சொல் தேர்வு, முதலிய இராஜதந்திர நுண்ணறிவு உலகைக் கவர்ந்தது.
தலைவரின் தோற்றம்
பல ஆண்டுகளாக தோன்றக்கரியவனாக இருந்த தலைவரின் தோற்றத்தை உலக ஊடகங்கள் நேரில் கண்டன.
உலக ஊடகங்களின் வழியாக உலக மக்கள் கண்டனர். தலைவரின் நேரடி தோற்றமும், எளிமையான அணுகுமுறையும், அவரைப் பற்றிய வியப்புக்களுடன் இருந்தவர்களுக்கு இன்னமும் ஈர்ப்பை ஏற்படுத்தியது.
உண்மையில் இது ஒரு செய்தியாளர் மாநாடாக மாத்திரமின்றி ஈழத் தமிழ் இனத்தின் விடுதலைப் பெருங்குரலை இந்த உலகம், ஒளிமுகத்துடன் காணக் கிடைத்த பேறானது. அத்துடன் தமிழர் தேசக் கோரிக்கை உலக அரசியல் உரையாடலின் ஒரு பகுதியாக மாறிய அறிய தருணமுமாகும்.
தலைவர் பிரபாகரன், அன்று சொன்ன சில பதில்கள் இன்றும் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் இளையவர்களால் நம்பிக்கைக்கும் எழுச்சிக்குமான படிமங்களாக, குறியீடுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
ஒரு தலைவனின் மொழியைத் தாண்டி, அவரது குரல், அவரது முகம், அவரது தோற்றம் என்பன ஒரு இனத்தின் எழுச்சியாகவும் முகவரியாகவும் போராட்டக் கருவியாகவும் உலகிற்குத் தென்பட்ட இந்தநாள் வரலாற்றில் என்றும் நினைவுக்கும் அற்புதத்திற்கும் உரிய பொன்னாள் ஆகும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு,
10 April, 2026 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில்
வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும்
இல்லை.

