Last Updated:
மத்திய பிரதேச தார் மாவட்டத்தில் தேவ்கிருஷ்ணாவை கூலிப்படையால் கொலை செய்ய திட்டமிட்ட மனைவி பிரியங்கா புரோஹித் ரகசிய காதலன் கமலேஷ் உட்பட நால்வர் கைது.
மத்திய பிரதேசத்தில் கணவனை கூலிப் படையை ஏவி கொலை செய்த இளம்பெண் ரகசிய காதலனுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்திய பிரதேசத்தில் தார் மாவட்டத்தில் உள்ள கோண்டிகேடா கிராமத்தைச் சேர்ந்தவர் தேவ்கிருஷ்ணா. இவரின் மனைவி 27 வயதான பிரியங்கா புரோஹித். பிரியங்காவுக்கு 15 வயதிலேயே தேவ் உடன் திருமணம் நடைபெற்றுள்ளது. அண்மையில் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டு கணவன் ஊருக்கு திரும்பியுள்ளார். இந்த நிலையில் இரவில் வீட்டில் கணவருடன் பிரியங்கா இருந்துள்ளார். அப்போது திடீரென மர்ம நபர்கள் மூன்று பேர் உள்ளே நுழைந்துள்ளனர். வந்த வேகத்தில் கணவன், மனைவி இருவரையும் தாக்கிய மர்ம நபர்கள் தனித்தனி அறையில் அடைத்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, தேவ்கிருஷ்ணாவை கொடூரமாக தாக்கிய கும்பல் அவரை கொலை செய்துவிட்டு தப்பியோடியதாக கூறப்பட்டது. மற்றொரு அறையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிரியங்கா கத்தி கூப்பாடு போட்டுள்ளார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அவர்களிடம் கொள்ளையர்கள் வீடு புகுந்து தனது கணவனை கொலை செய்துவிட்டு, 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றதாக கூறி கண்ணீர் சிந்தியுள்ளார்.
இந்நிலையில், தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், தேவ்கிருஷ்ணாவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், சம்பவ இடத்தில் இருந்து தடயங்களை சேகரித்தனர். முதல்கட்ட விசாரணையில் மர்ம நபர்கள் திட்டமிட்டு வேண்டும் என்றே தேவ்கிருஷ்ணாவை தலையில் பலமாக தாக்கி கொலை செய்தது தெரியவந்துள்ளது. அத்துடன் நகைகள் மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்டதற்கான தடயங்கள் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து தேவ்கிருஷ்ணாவின் மனைவி பிரியங்காவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் முன்னுக்குப்பின் முரணான தகவலை தெரிவித்ததால் அவர் மீதே சந்தேகம் எழுந்தது. அத்துடன், நகை, பணத்திற்காக தனது கணவன் கொல்லப்பட்டதாக கூறி நீலிக்கண்ணீர் வடித்து ஓவர் ஆக்டிங் போட்டதால் வசமாக சிக்கியுள்ளார். தொடர்ந்து கிடுக்கிப்பிடி போட்டதில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அம்பலமாகியுள்ளன. அதில் 27 வயதான பிரியங்கா, கமலேஷ் என்பவருடன் முறை தவறிய உறவில் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் கணவனை தீர்த்துக்கட்டி விட்டு ரகசிய காதலனை கரம் பிடிக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக, கூலிப்படையை ஏவி கணவனை கொல்ல சதித் திட்டம் தீட்டியுள்ளனர்.
அதன்படி கமலேஷ் மூலம் கூலிப்படைத் தலைவன் சுரேந்திரா என்பவருக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்துள்ளனர். பணத்தை வாங்கிய சுரேந்திரா, சம்பவத்து அன்று தனது கூட்டாளிகள் இருவருடன் தேவ்கிருஷ்ணா வீட்டிற்கு சென்றுள்ளார். அவர்கள் பிரியங்காவை தனி அறைக்கு அனுப்பிவிட்டு தேவ்கிருஷ்ணாவை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளனர். கூலிப்படையினர் சென்றதும் பிரியங்கா தனது கை, கால்களை தானே கட்டிக் கொண்டு நகை, பணத்திற்காக கணவன் கொல்லப்பட்டதாக கூறி ஆஸ்கார் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால், இதுபோன்று பலரின் நடிப்பை பார்த்த போலீசார் அவரின் சதித் திட்டத்தை கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரியங்கா, அவரின் ரகசிய காதலன் கமலேஷ் உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவான கூலிப்படைத் தலைவன் சுரேந்திராவை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். கணவனை கூலிப் படையை ஏவி கொலை செய்துவிட்டு கொள்ளை நாடகம் போட்ட இளம்பெண், தனது ரகசிய காதலனுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


