இஸ்ரோவின் புது முயற்சி!
நியூஸ் 18-க்கு தெரியவந்துள்ள தகவல்களின்படி, வரும் காலங்களில் விண்வெளிக்கு மனிதனை அனுப்புவதற்கு தேவையான முன்னெடுப்புகளை இந்தியா தொடர்ந்து செய்து வருகிறது. இப்படி மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும்போது, விண்கலங்களுக்கும் மனிதர்களுக்கும் தொடர் கண்காணிப்பும் தரவு பரிமாற்றங்களும் தேவைப்படும். சிறிய தாமதம் அல்லது இடையூறு ஏற்பட்டால்கூட, அது பயணத்தின் பாதுகாப்பையும் முடிவெடுக்கும் திறனையும் பாதிக்கும். எனவே மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் போது, ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் உடனடியாகப் பதிலளிக்க வேண்டியது அவசியம்.
இதை கருத்தில் கொண்டு விண்வெளி வீரர்களின் பாதுகாப்பு மற்றும் திட்டம் வெற்றி பெற, பூமியில் உள்ள கட்டுப்பாட்டு மையத்துடன் நொடிப் பொழுது தாமதமின்றி பேசுவது மிக அவசியம். எனவே தொழில்நுட்ப ரீதியாக இஸ்ரோ தன்னை வலிமையாக்க தொடர்ந்து போராடி வருகிறது. சரியாக சொல்ல வேண்டுமென்றால் வலுவான, பாதுகாப்பான மற்றும் மிகவும் நம்பகமான தகவல் தொடர்பு வலையமைப்பை உருவாக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
இஸ்ரோ ராக்கெட்
இதற்காக தற்போது இஸ்ரோ இரண்டு முக்கிய இடங்களுக்கு இடையே ஒரு பிரத்யேக அதிவேகத் தகவல் தொடர்பு இணைப்பை இஸ்ரோ அமைத்து வருகிறது. அதில் முதல் இடம், நோட் ஏ (Node A) என்று அழைக்கப்படும், சதீஷ் தவான் விண்வெளி மையம். குறிப்பாக, அங்குள்ள ISTRAC டெலிமெட்ரி-1 நிலையம். இரண்டாவது நோட் பி (Node B) என அழைக்கப்படும் ஐரோப்பிய விண்வெளி செயல்பாட்டு மையம். இதில் நோட் ஏ, இந்தியாவின் முதன்மைத் தகவல் தொடர்பு மையமாகச் செயல்படும். விண்கலத்திலிருந்து வரும் தரவுகளைப் பெறுவதற்கும், அங்கிருந்து கட்டளைகளை அனுப்புவதற்கும் இது பயன்படுத்தப்படுகிறது. அதுவே நோட் பி, பூமி சுழலும் போது இந்தியாவுடன் தொடர்பு துண்டிக்கப்படும் நேரங்களில், உலகளாவிய தரை நிலையங்கள் மூலம் விண்கலத்தைக் கண்காணிக்கவும், தகவல்களைப் பரிமாறவும் உதவும்.
இந்த தகவல் தொழில்நுட்பம் எப்படி சாத்தியப்படுகிறது?
இந்த இரண்டு மையங்களும் கடலுக்கடியில் உள்ள அதிவேக ஆப்டிகல் ஃபைபர் கேபிள்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இந்தத் தரவுப் பரிமாற்றத்திற்காகப் பொது இணையத்திற்குப் பதிலாக, தனிப்பட்ட ‘எம்பிஎல்எஸ்’ (MPLS Layer 3) நெட்வொர்க் பயன்படுத்தப்படுகிறது, இது கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது. விண்வெளி வீரர்கள் 24 மணிநேரமும் தரைக்கட்டுப்பாட்டு மையத்துடன் நொடிப் பொழுது தாமதமின்றி பேசுவதை இந்த மையங்கள் உறுதி செய்கின்றன. ஆப்டிகல் ஃபைபர் மூலம் ஏற்படுத்தப்பட்ட இந்த இணைப்பு, தரவுகளை அனுப்ப ஒளி சமிக்ஞைகளைப் பயன்படுத்தும். இதனால் எவ்வளவு தூரமாக இருந்தாலும் தரவுகள் மிக வேகமாக, பாதுகாப்பாக சென்றடையும். நம்பகமான தகவல்தொடர்புக்கும் இது உதவும்.
இந்த தகவல் பரிமாற்றத்துக்காக நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொதுவான இணையத்தைப் பயன்படுத்தாமல், MPLS என்ற தனிப்பட்ட மற்றும் பாதுகாப்பான தகவல் தொடர்பு பாதையை இஸ்ரோ பயன்படுத்துகிறது. இது ஹேக்கர்களிடமிருந்து தகவல்களைப் பாதுகாக்கவும், வேகமான தொடர்பிற்கும் உதவுகிறது. மட்டுமன்றி தகவல்கள் சிதறிப் போகாமல் சரியான இடத்திற்கு (விண்கலத்திற்கோ அல்லது கட்டுப்பாட்டு மையத்திற்கோ) சென்றடைவதை உறுதி செய்ய ரூட்டர்கள் (Routers) பயன்படுத்தப்படுகின்றன.

நோக்கம் என்ன?
இவை அனைத்தின் முதன்மை நோக்கமும், மிக அவசியமான தரவுகளை நிகழ்நேரத்தில் பரிமாற்றம் செய்வதை சாத்தியமாக்குவதே. இதில் விண்கலங்களிலிருந்து பெறப்படும் தொலை அளவீட்டுத் தரவுகள், கண்காணிப்புத் தகவல்கள் மற்றும் தரை நிலையங்களிலிருந்து அனுப்பப்படும் கட்டளை சமிக்ஞைகள் ஆகியவை அடங்கும்.
இத்திட்டத்தின் மூலம் இந்தியா தனது சொந்த உள்கட்டமைப்பை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஐரோப்பிய விண்வெளி முகமை போன்ற சர்வதேச மையங்களுடன் இணைந்து செயல்படுகிறது. இது இஸ்ரோவின் தொழில்நுட்ப வலிமையை உலக அளவில் உயர்த்துகிறது. நவீன தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வதன் மூலம் விண்வெளிக்கு வீரர்களைப் பாதுகாப்பாக அனுப்பி, மீண்டும் பூமிக்கு பாதுகாப்பாக அழைத்து வருவதற்கான தனது கட்டுப்பாட்டை இஸ்ரோ உறுதிப்படுத்துகிறது.

