Last Updated:
கிரீஸ் அடுத்தாண்டு முதல் 15 வயதுக்கு உட்பட்டோருக்கு சமூகவலைதள தடை, பள்ளிகளில் மொபைல் தடை, திரைப்பயன்பாடு கட்டுப்பாட்டு மென்பொருள், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் அழைப்பு
கிரீஸில் 15 வயதுக்கு உட்பட்டோர் அடுத்தாண்டு முதல் சமூகவலைதளங்களை பயன்படுத்த முடியாது என அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் சிறுவர்கள் சமூகவலைதளங்களுக்கு அடிமையாவதில் இருந்து தடுக்க பல்வேறு நாடுகளும் பிரத்யேக முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், கிரீஸ் நாட்டில் ஏற்கெனவே பள்ளிகளில் மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்த முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பதின்ம வயதினரின் திரைப்பயன்பாட்டைக் கட்டுப்படுத்த பிரத்யேக மென்பொருளையும் அந்நாட்டு அரசு உருவாக்கியுள்ளது.
இதன் அடுத்தக்கட்டமாக, அடுத்தாண்டு முதல் 15 வயதுக்கு உட்பட்டோர் சமூகவலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ், டிக்டோக் மூலம் அறிவித்துள்ளார். இது கடினமான முடிவு என்றாலும், மிக அவசியமானது என்று குறிப்பிட்டுள்ள மிட்சோடாகிஸ், சிறார்களிடையே அதிகரித்துவரும் பதற்றம் மற்றும் தூக்கமின்மை போன்ற பாதிப்புகளைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தார்.
கிரீஸ் மட்டுமின்றி, ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் இச்சட்டத்தை அமல்படுத்தினால் தான், சிறார்கள் சமூகவலைதளங்களை பயன்படுத்துவதை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என பிரதமர் மிட்சோடாகிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
Apr 09, 2026 10:54 AM IST


