
பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வு வாரத்திற்கான நடவடிக்கைகள் மற்றும் விவாதங்கள் தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, ஏப்ரல் 07, 09 மற்றும் 10ஆம் திகதிகளில் பாராளுமன்றம் கூடவிருப்பதாக பாராளுமன்றச் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கடந்த 2026.03.19ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இத்தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
சபை அமர்வு நேரங்கள் மற்றும் ஆரம்பகட்ட அலுவல்கள்:
பாராளுமன்றம் கூடும் தினங்களில் முற்பகல் 09.30 மணி முதல் 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22-இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முதன்மை அலுவல்கள் இடம்பெறும்.
• முற்பகல் 10.00 – 11.00: வாய்மூல விடைக்கான வினாக்கள்.
• முற்பகல் 11.00 – 11.30: நிலையியற் கட்டளை 27(2)-இன் கீழான வினாக்கள்.
ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை:
முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 04.45 மணி வரை பின்வரும் விடயங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்:
• விளையாட்டில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துப் பயன்பாட்டிற்கு எதிரான சர்வதேச சமவாயச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள்.
• செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள்.
• இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள்.
• கடந்த 2026.03.17 அன்று முதலாம் வாசிப்புக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டமூலம் மற்றும் சமூகப் பாதுகாப்பு உதவுதொகை சட்டமூலம் ஆகியவை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்படாவிடின், அன்றைய தினம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்.
அன்று பிற்பகல் 04.45 முதல் 05.00 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கான திருத்தங்கள் விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படும். பிற்பகல் 05.30 மணிக்கு இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை விவாதமின்றி அனுமதிக்கப்படும்.
ஏப்ரல் 08, புதன்கிழமை:
அரசாங்க விடுமுறை தினம் என்பதால் அன்று பாராளுமன்றம் கூடமாட்டாது.
ஏப்ரல் 09, வியாழக்கிழமை:
முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை பின்வரும் ஒழுங்குவிதிகள் விவாதிக்கப்படும்:
• தரைப்படைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் (அத்தியாயம் 357).
• கடற்படைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் (அத்தியாயம் 358).
• வான்படைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் (அத்தியாயம் 359).
• பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் தீர்மானம் ஏதேனும் வெளியிடப்பட்டிருந்தால், அது அன்றைய தினம் விவாதமின்றி அங்கீகரிக்கப்படும்.
இதனைத் தொடர்ந்து, பிற்பகல் 02.00 மணி முதல் 05.30 மணி வரை உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதம் நடைபெறும்.
ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை:
முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 05.30 மணி வரை, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் நடைபெறுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

