புதுச்சேரி மாநிலத்தில் ஏப்ரல் 9ம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி புதுச்சேரி மாநிலத்தில் தேர்தல் பரப்புரைக்காக இன்று வருகை தந்தார். காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுவை விமான நிலையத்திற்கு வந்த ராகுல் காந்தியை புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்தியலிங்கம், திமுக அமைப்பாளர் சிவா, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இந்தியா கூட்டணியில் போட்டியிடும் 16 காங்கிரஸ் வேட்பாளர்கள் மற்றும் திமுக, விசிக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி மேடையில் பேசிய ராகுல் காந்தி, “புதுச்சேரி மாநிலம் இங்கிருந்து ஆளப்படவில்லை, எங்கோ இருப்பவர்களால் (மத்திய அரசு/பாஜக) இயக்கப்படுகிறது. மக்களின் கருத்துக்கள் மதிக்கப்படாமல் சித்தாந்தங்கள் திணிக்கப்படுகின்றன.
மாநிலத்தில் நடைபெறும் ஒவ்வொரு டெண்டருக்கும் 30% கமிஷன் வாங்கப்படுவதாகவும், எதைத் தொட்டாலும் ஊழல் மலிந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
பல ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. காரைக்கால் துறைமுகம் விற்கப்பட்டுவிட்டது, அடுத்ததாக மின்வாரியமும் அதானி குழுமத்திற்கு விற்கப்படலாம் என எச்சரித்தார்.
போலி மருந்துகள் தயாரிப்பு, கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே மதுபானக் கடைகள் திறப்பு போன்றவற்றால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, பெண்களும் குழந்தைகளும் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
புதுச்சேரியை ஒரு துணைநிலை ஆளுநர் மட்டும் ஆட்சி செய்வதை நாங்கள் ஏற்கவில்லை. புதுச்சேரியை இந்த மண்ணின் மைந்தர்கள்தான் ஆட்சி செய்ய வேண்டும்” என ராகுல் காந்தி வலியுறுத்தினார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த 6 மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என உறுதி அளித்தார்.
”புதுச்சேரி மக்களுக்கும் எனக்கும் உள்ள உறவு அரசியல் ரீதியானது அல்ல; அது என் குடும்பத்தோடு பிணைக்கப்பட்ட ஆழமான உள்ளார்ந்த உறவு” என்றார்.
ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றப்படும் என ராகுல் காந்தி அறிவித்த முக்கிய வாக்குறுதிகள் பின்வருமாறு:-
வேலையில்லா உதவித்தொகை: வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ₹2,000 வழங்கப்படும்.
அரசு மற்றும் தனியார் துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். அரசு வேலைவாய்ப்புக்கான வயது வரம்பு 40 ஆக அதிகரிக்கப்படும்.
பெண்களுக்கு இலவச பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹20 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு வழங்கப்படும். எந்த நோயாக இருந்தாலும் உயர்தர சிகிச்சை முற்றிலும் இலவசமாக அளிக்கப்படும்.

