மலாக்கா | ஏப்ரல் 6, 2026:
மலாக்கா, தாங்கா பத்து பகுதியில் உள்ள பாாயா லுபோ (Jalan Paya Luboh) சாலையில் நேற்று அதிகாலை நடத்தப்பட்ட ‘ஒப் காஸ்’ (Op Khas) அதிரடி சோதனையில், ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் சாகசங்களில் ஈடுபட்ட 4-ஆம் படிவ மாணவன் உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2:00 மணி முதல் 5:00 மணி வரை இந்தச் சோதனை நடைபெற்றது, இதில் கைது செய்யப்பட்டவர்கள் அதிவேகமாகச் செல்லுதல், வாகனங்களுக்கு இடையே குறுக்கும் நெடுக்குமாக (Zig-zag) ஓட்டுதல் போன்ற உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாகசங்களில் ஈடுபட்டுள்ளனர் என்றும், கைதான 16 உள்ளூர் இளைஞர்களும் 16 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். இதில் ஒரு பள்ளி மாணவனும் அடங்குவார் என்று, மலாக்கா போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கப் பிரிவுத் தலைவர் சுப்ரிடெண்டண்ட் முகமட் ஜாகி ரமாட் கூறினார்.
இந்தச் சோதனையின் போது மொத்தம் 178 வாகனங்கள் சோதனையிடப்பட்டன: இதில் விதிமுறைகளை மீறிய 87 மோட்டார் சைக்கிள்கள் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.
அதேநேரம் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக மொத்தம் 237 சம்மன்கள் வழங்கப்பட்டன.அவற்றில் முறையற்ற உரிமத் தகடுகள் (53 வழக்குகள்), பக்கவாட்டுக் கண்ணாடிகள் இல்லாமை (31 வழக்குகள்),
சட்டவிரோத எக்ஸாஸ்ட் (Exhaust) மாற்றங்கள் (25 வழக்குகள்), உரிமம் இன்றி வாகனம் ஓட்டுதல் (20 வழக்குகள்) என்பன அடங்கும் .
கைது செய்யப்பட்ட 16 பேரும் சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987-இன் பிரிவு 42(1)-இன் கீழ் (அலட்சியமாகவும் ஆபத்தான முறையிலும் வாகனம் ஓட்டுதல்) விசாரிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், மலாக்கா சாலைப் போக்குவரத்து வாரியம் (JPJ) சார்பில் 274 நோட்டீஸ்களும் வழங்கப்பட்டுள்ளன.




