ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி யார் என்பது குறித்து சமூகத்தில் நடைபெற்று வரும் விவாதத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்க்கும் வகையில், முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில எழுதிய ‘ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியைத் தேடுதல்’ என்ற புத்தகம் சமீபத்தில் கொழும்பில் வெளியிடப்பட்டது.
முன்னாள் அரச புலனாய்வுத் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது சில அரசியல் குழுக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருக்கும் சூழலில், இத்தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி சஹாரன் ஹாஷிம் தான் என்று கம்மன்பில தனது புத்தகத்தில் வலியுறுத்துகிறார்.
உளவுத்துறை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழாவில், நாட்டிற்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்த உளவுத்துறை அதிகாரிகளின் சேவையையும் விருந்தினர்கள் பாராட்டினர்.
அரசாங்கத்தில் சில சலசலப்பு
முருத்தெட்டுவ தேரர் தலைமையில் நடைபெற்ற இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் பெருந்திரளான பிக்குகள் கலந்துகொண்டனர். அரசாங்கத்தின் சார்பில் யாரும் கலந்துகொள்ளவில்லை.

இருப்பினும், முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் கலந்துகொண்டனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ரஞ்சித் மத்தும பண்டார, தலதா அத்துகோரல, சாகல ரத்நாயக்க, நாமல் ராஜபக்ச, சரத் என். சில்வா மற்றும் வாசுதேவ நனயக்கார உள்ளிட்ட இரு கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பல அரசியல் பிரமுகர்கள் ஒரே மேடையில் கூடியிருந்தது, எதிர்கால எதிர்க்கட்சி கூட்டணியின் ஒரு முன்னோடியாகக் கருதப்பட்டதுடன், அது அரசாங்கத்தில் சில சலசலப்புகளையும் ஏற்படுத்தியது.
நிகழ்ச்சியின் போது, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஏற்பட்ட இருமல் காரணமாக, மண்டபத்தில் உள்ள குளிரூட்டிகளை அணைக்க கம்மன்பில தயாராக இருந்ததாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று விவரித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி முரண்
ஆனால், மக்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் கருத்தில் கொண்டு, முன்னாள் ஜனாதிபதி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாதுகாப்புப் பணியாளர்களிடம் ஒரு குவளை சுடுநீரை மட்டும் கோரியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் ஐக்கிய தேசியக் கட்சிப் பிரதிநிதிகளின் பங்கேற்பு, கட்சிக்குள்ளேயே ஒரு விவாதத்தையும் கிளப்பியது.
நிகழ்ச்சியின்போதே, கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன, தினித் சிந்தக மற்றும் தனுக்க கருணாரத்ன ஆகியோர் இவ்விவகாரம் குறித்து விவாதித்தனர்.
மேலும், முன்னாள் பாதுகாப்புத் தலைவரின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும், ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு சமூக ஊடகங்களில் அறிவிக்கப்படும் என்றும் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
இதற்கிடையில், கட்சியின் பிரதித் தலைவர் நவீன் திசாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சிப் பிரதிநிதிகளின் பங்கேற்பு குறித்து தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன், தாம் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதில்லை என்றும், கட்சித் தலைவர்களின் பங்கேற்பு குறித்து வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறினார்.
சர்வதேச விசாரணை
இந்த நிகழ்வில் எதிர்க்கட்சியின் தலைவர்கள் கலந்துகொண்டது கட்சிக்குள் ஒரு கடுமையான விவாதத்தையும் தூண்டியது.

ஈஸ்டர் தாக்குதல்கள் ஒரு சதி என்ற கட்சியின் கருத்துக்கு முரணான ஒரு நிகழ்வில் கலந்துகொண்டதற்காக, சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரை முஜிபுர் ரஹ்மான் மற்றும் நளின் பண்டார போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாகக் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்குப் பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர், யாரையும் விடுவிப்பதற்காகவோ அல்லது அரசியல் ஆதாயம் பெறுவதற்காகவோ அல்லாமல், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தனது கடமையை நிறைவேற்றுவதற்கும், வெவ்வேறு சித்தாந்தங்களைப் புரிந்துகொள்வதற்கும் அழைப்பின் பேரில் அங்கு சென்றதாகச் சுட்டிக்காட்டினார்.
தாக்குதல்கள் குறித்து ஒரு பாரபட்சமற்ற சர்வதேச விசாரணை அவசியம் என்ற தனது நிலைப்பாடு மாறவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்
கட்சியின் பொதுச் செயலாளரும், புத்தகத்தில் உள்ள சில கருத்துக்களுடன் தன்னால் உடன்பட முடிந்தாலும், முழுமையான கருத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான ஒரு கலந்துரையாடலின் போது, எதிர்க்கட்சித் தலைவரின் பயணம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனிடம் விசாரித்தபோது, அதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று அவர் தெரிவித்ததாக மேற்படி ஊடகம் சுட்க்காட்டியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

