
வளைகுடா பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியான இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஹார்முஸ் நீரிணையைத் திறக்க அல்லது புதிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட ஈரானுக்கு 48 மணிநேரம் மட்டுமே அவகாசம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கில் ஒரு மாதத்திற்கும் மேலாகத் தொடரும் போரினால் நிலைமை மோசமடைந்து வருகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஒருபுறமும், ஈரான் மறுபுறமும் பரஸ்பரத் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் முக்கிய பாதையான ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) முடங்கியுள்ளதால், உலக நாடுகள் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.
உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் மற்றும் எல்.பி.ஜி விநியோகம் இந்த ரூட் வழியாகவே நடைபெறுவதால், இதன் பாதிப்பை தெற்காசிய நாடுகள் நேரடியாக எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளன. இதனால் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண அமெரிக்காவுக்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.
ஈரானின் மின்சாரக் கட்டமைப்புகள் மீதான தாக்குதலை 10 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக கடந்த மார்ச் 26-ஆம் தேதி டிரம்ப் அறிவித்திருந்தார். அந்த அவகாசம் முடியவுள்ள நிலையில், தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
“ஈரானுக்கு ஒரு ஒப்பந்தம் செய்யவும் அல்லது ஹார்முஸ் நீரிணையைத் திறக்கவும் நான் 10 நாட்கள் அவகாசம் கொடுத்தது நினைவிருக்கிறதா? இப்போது நேரம் முடிந்து கொண்டிருக்கிறது. இன்னும் 48 மணிநேரத்திற்குள் அவர்கள் சரியான முடிவை எடுக்காவிட்டால், ஈரான் மீது முழுமையான நரகம் வந்து இறங்கும்!” எனத் நேரடியாக எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த நிபந்தனைகளை ‘ஒருதலைப்பட்சமானது மற்றும் அநீதியானது’ எனக் கூறி ஈரான் ஏற்கனவே நிராகரித்துள்ளது. இருப்பினும், ஈரான் அதிகாரிகள் தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், கூடுதல் அவகாசம் கோரியுள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். “அவர்கள் மரியாதையுடன் அவகாசம் கேட்டனர். ஆனால் அவர்கள் செய்ய வேண்டியதைச் செய்யாவிட்டால், அவர்களின் மின் நிலையங்களை அழிப்பேன்” என்று ஃபாக்ஸ் நியூஸ் (Fox News) நேர்காணலில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் இந்தக் கடும் எச்சரிக்கையினால் வளைகுடா பிராந்தியத்தில் எந்நேரமும் போர் வெடிக்கும் என்ற உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது.

