கம்போடியாவின் சுவே ரியெங் (Svay Rieng) மாநிலத்தில் நிலத்தடி சூதாட்டக்கூட வளாகம் ஒன்றில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில், இணையவழி மோசடிகளில் ஈடுபட்டதாக 107 வெளிநாட்டினர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி, கம்போடிய வணிகப் பந்தய நிர்வாக ஆணையம் மற்றும் காவல்துறையினர் இணைந்து மேற்கொண்ட சோதனையில் இந்த மோசடி கும்பல் பிடிபட்டது.
நான்கு நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 107 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 26 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் அனைவரும் சட்ட நடவடிக்கைகளுக்காக உரிய அரசுத் துறைகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட கணினிகள் மற்றும் மின்னணு உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அந்த வளாகத்தில் செயல்பட்டு வந்த சூதாட்டக்கூடத்தின் உரிமத்தை அதிகாரிகள் உடனடியாக ரத்து செய்தனர்.
கம்போடியாவை மையமாகக் கொண்டு இயங்கும் இணையவழி மோசடி கும்பல்களை வேரறுக்க அந்நாட்டு அரசு ‘கமாண்ட் நம்பர் 01’ (Command Number 01) என்ற பெயரில் தீவிரமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலாக மாறிவரும் இணையவழி மோசடிகளைக் கட்டுப்படுத்த, கம்போடிய அரசு மேற்கொண்டு வரும் இந்தத் தீவிர நடவடிக்கை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
The post கம்போடியாவில் அதிரடிச் சோதனை: இணையவழி மோசடியில் ஈடுபட்ட 107 வெளிநாட்டினர் கைது! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

