Last Updated:
தெலங்கானா ஜூப்ளி நகர் ஸ்ரீசைலம் ஆண் குழந்தை இல்லாத விரக்தியில் இரட்டை பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கிணற்றில் தள்ளி கொலை, கிராம மக்கள் பிடித்து போலீசுக்கு ஒப்படைப்பு.
தெலங்கானா மாநிலத்தில் ஆண் குழந்தை இல்லையென்ற விரக்தியில் இரட்டை பெண் குழந்தைகளைக் கொடூரமாக கொலை செய்த சைக்கோ தந்தையை போலீசார் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஜூப்ளி நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீசைலம். கடந்த சில வருடங்களுக்கு முன் ஒரே ஏரியாவைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தனர். தனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்ற ஆவலில் இருந்த ஸ்ரீசைலத்திற்கு இரண்டும் பெண் குழந்தைகளாகப் பிறக்க, அவருக்கு அது பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
இதனால் தனது மகள்கள் மீது ஸ்ரீசைலம் வெறுப்பையே காட்டி வந்துள்ளார். குழந்தைகள் பிறந்து இரண்டு ஆண்டுகளை கடந்தும் கூட அவர்களுக்கு இதுவரை ஒரே ஒரு ஆடையை கூட தந்தை என்கிற ஸ்தானத்தில் அவர் வாங்கிக் கொடுத்தது இல்லை. தோழில் தூக்கி கொஞ்சியதும் இல்லை. இதனால் கணவன், மனைவிக்குள்ளும் கடும் பிரச்சினை ஏற்பட்டு, குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் உண்டானது.
இந்நிலையில் ஆண் குழந்தை இல்லையென மனைவி மீதான ஆத்திரத்தை மகள்கள் மீது காட்டிய ஸ்ரீசைலம் ஆக்ரோஷமாக நடந்து கொண்டுள்ளார். தன்னுடைய மகள்களைத் தூக்கிக்கொண்டு அருகில் உள்ள வயல்வெளிக்கு சென்ற ஸ்ரீசைலம் இரு பிஞ்சுகளையும் கிணற்றில் வீசிவிட்டு தானும் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதில் நிரீல் மூழ்கி இரட்டை குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆனால் நீச்சல் தெரிந்த ஸ்ரீசைலம் நீந்தி கரை சேர்ந்து உயிர் பிழைத்து விட்டார். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த கிராம மக்கள் ஸ்ரீசைலத்தை பிடித்து தர்ம அடி கொடுத்து, போலீசில் ஒப்படைத்தனர். அதன்படி ஸ்ரீசைலத்தை கைது செய்த போலீசார், குழந்தைகளின் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கரீம் நகர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தைகளைக் கிணற்றில் தள்ளுவதற்கு முன் இரண்டு பேருக்கும் ஸ்ரீசைலம் விஷம் கொடுத்ததாகவும் விசாரணையில் அவர் கூறியுள்ளார். கணவனின் ஆக்ரோஷ புத்தியால் இரு பெண் குழந்தைகளையும் இழந்து தற்போது ஸ்ரீசைலத்தின் மனைவி கடும் சோகத்தில் மூழ்கியுள்ளார். ஏற்கனவே இதேபோல தெலங்கானாவில் கர்ப்பிணி மனைவி, இரு மகள்கள் என ஒட்டு மொத்த குடும்பத்தையும் ஆண் குழந்தை இல்லாத விரக்தியில் கணவனே கொலை செய்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


