நிலக்கரி மோசடியை மறைக்க மக்கள் மீது மின் கட்டண சுமை சுமத்தப்படுகிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று (03) நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய அரசாங்கத்தின் நிலக்கரி மோசடி காரணமாக நாடு பாரிய மின்சார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.
இந்த ஊழலினால் நாடு இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் புத்தாண்டு காலத்தில் மக்கள் மின்சாரம் இன்றி ஜெனரேட்டர்களைப் பயன்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த மோசடிகளை மறைப்பதற்காகவே மின் கட்டண அதிகரிப்பு மூலம் மக்கள் மீது சுமை சுமத்தப்பட்டுள்ளது. நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் தொடர்பான அறிக்கை வெளியாகி மூன்று மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்காத விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர், நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்ட பின்னரே அங்கு சென்று உண்மைகளை மறைக்க முயற்சிக்கிறார் என்றார். (a)

