Last Updated:
TVK Vijay | தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று புதுச்சேரி தட்டாஞ்சாவடி மார்க்கெட் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். பிற்பகல் 1 மணிக்குள் பரப்புரையை முடிக்க காவல்துறை கெடு விதித்த நிலையில் ரோடு ஷோ சென்று பரப்புரை நடக்கும் இடத்தை அடைந்தார்.
புதுச்சேரியில் பரப்புரை செய்த தவெக தலைவர் விஜய், புதுச்சேரியில் களத்தில் மக்களோடு மக்களாக நிற்கிறவர்களை தான் வேட்பாளர்களாக தேர்வு செய்துள்ளேன் என்று தெரிவித்தார்.
30 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட புதுச்சேரிக்கு வரும் ஏப்ரல் 9ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று புதுச்சேரி தட்டாஞ்சாவடி மார்க்கெட் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். பிற்பகல் 1 மணிக்குள் பரப்புரையை முடிக்க காவல்துறை கெடு விதித்த நிலையில் ரோடு ஷோ சென்று பரப்புரை நடக்கும் இடத்தை அடைந்தார்.
அதன்பின் பரப்புரையில் பேசிய விஜய், “புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக போட்டியிடுகிறது. இங்கே களத்தில் மக்களோடு மக்களாக நிற்கிறவர்களை தான் வேட்பாளர்களாக தேர்வு செய்துள்ளேன். புதுச்சேரியில் இரண்டு கூட்டணி இருக்கும்போது நாங்கள் தனியாக வந்து என்ன செய்யப்போகிறோம் என்கிற கேள்வி உங்களுக்கு எழலாம். அதற்கு பதில் சொல்லும் முன் இந்த இரண்டு கூட்டணி பற்றி பேசுகிறேன்.
திமுக காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் மட்டுமே இங்கே பல முறை ஆட்சியில் இருந்தார்கள். இந்தக் கூட்டணியில் இருந்த ஒரு தலைவர் மக்களை மட்டுமல்லாமல் அவரின் தலைவரையே எப்படி ஏமாற்றினார் என்பதை உலகமே பார்த்து சிரித்தது. திமுகவும் இங்கே 3 முறை ஆட்சியில் இருந்தது. இப்போது இந்த இரு கட்சிகளும் பெயருக்கு தான் கூட்டணி. ஆனால் ஒருவரை ஒருவர் எதிர்த்து நிற்கிறார்கள். தமிழகத்தை போல புதுச்சேரியிலும் திமுக காங்கிரஸ் கூட்டணி குழப்பமான கூட்டணியாகத் தான் உள்ளது.
இன்னொரு கூட்டணி உள்ளதே அது தான் என்ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணி. அது சேர்ந்த கூட்டணி இல்லை சோர்ந்து போகிற கூட்டணி. இதில் எங்களை வைத்து அவர்களாக ஒரு அரசியல் நடத்தினார்கள். காங்கிரஸ், பாஜக கூட்டணி இரண்டும் ஒன்றியத்தில் ஆட்சியில் இருப்பவர்கள், இருந்தவர்கள் தானே. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து ஏன் அவர்கள் கொண்டுவரவில்லை. சுஷ்மா சுவராஜ் 20 வருடத்துக்கு முன்னாடியே புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தியும் ஏன் கொடுக்கவில்லை.
இதை கேட்டால் விஜய்க்கு அரசியல் அனுபவம் இல்லை என்பார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாநில அந்தஸ்து பெற 100% முயற்சிப்போம். தவெக ஆட்சிக்கு வந்தால் உடனடியாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும். அனைத்து அரசு காலி பணியிடங்களும் நிரப்பப்படும். ஒவ்வொரு குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் காப்பீடு வழங்கப்படும். தேர்தல் என்பது மக்கள் சம்பந்தப்பட்டது. இங்கே ஏற்கனவே அரசியலில் இருப்பவர்கள் மக்கள் கேள்விகளுக்கு பதில் சொல்வதில்லை. மக்கள் சார்பாக நான் கேட்டால் கோபப்படுகிறார்கள். ஏமாற்று கூட்டணிகளுக்கும், ஓட்டை உடைசல் கூட்டணிகளுக்கும் ஓட்டு போடாதீர்கள்.
இந்த இரண்டு கூட்டணிகளுக்கும் வாக்களிப்பது வேஸ்ட் தான். புதுச்சேரிக்கு நல்லாட்சி வேண்டும். தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஒருமுறை வாய்ப்பளியுங்கள். இந்த விஜய் உங்களுக்கு துணையாக இருப்பான். தமிழகத்தில் தவெக ஆட்சி அமையும். புதுச்சேரியிலும் தவெக ஆட்சி அமையணும்.” என்று தெரிவித்துள்ளார்.
Puducherry (Pondicherry),Puducherry,Puducherry (Pondicherry)
Apr 04, 2026 12:04 PM IST


