ஈரானின் ஏவுகணை, ஆளில்லா விமானம் மற்றும் வான் பாதுகாப்பு உற்பத்தித் தளங்கள் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய எதிரிகளின் கைக்கு எட்டாத தூரத்தில் இருப்பதாகவும் ஆக்கிரமிப்புகளுக்குப் பதிலடியாகத் தொடர் தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் ஈரானின் கதம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஈரானின் இராணுவ உற்பத்தி அதன் எதிரிகளுக்குத் தெரியாத இடங்களில் நடைபெறுவதாகவும், எதிரிகள் இந்தத் தளங்களை அணுக முடியாது என்றும் செய்தித் தொடர்பாளர் இன்று(02) வியாழக்கிழமை தெரிவித்தார்.
எந்தவொரு முயற்சியும் தவறானது
ஈரானின் இராணுவத் திறன்கள் மற்றும் உபகரணங்கள் குறித்த அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவுத் தகவல்கள் முழுமையற்றவை என்றும், நாட்டின் விரிவான மூலோபாயத் திறன்கள் குறித்து அவர்கள் அறியாமல் உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மூலோபாய ஏவுகணை உற்பத்தி மையங்கள், நீண்ட தூரத் தாக்குதல் ஆளில்லா விமானங்கள், மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகள், மின்னணுப் போர் உபகரணங்கள் அல்லது பிற சிறப்பு இராணுவத் தளங்களைக் குறிவைக்கும் எந்தவொரு முயற்சியும் தவறானது என்று அவர் எச்சரித்தார்.
அவர்கள் தாக்கியதாக நம்பும் தளங்கள் முக்கியத்துவம் அற்றவை என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஈரானின் ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் மற்றும் மூலோபாய உபகரணங்களைக் கணக்கிட எதிரிகள் முயற்சிக்கக் கூடாது என்றும், அத்தகைய முயற்சிகள் பயனற்றவை என்றும் அந்த செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.
விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்
பெருமைமிக்க, கண்ணியமிக்க, மற்றும் முஸ்லிம் ஈரானிய தேசத்திற்கு எதிராகப் போரைத் தொடங்கிய ஆக்கிரமிப்பாளர்கள் இறுதியில் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

இறைவனின் மீது நம்பிக்கை வைத்து, எதிரிகள் நிரந்தர அவமானத்தையும் சரணடைதலையும் சந்திக்கும் வரை இந்த மோதல் தொடரும் என்று வலியுறுத்திக் கூறிய அவர், ஈரானின் பதிலடிகள் மேலும் மேலும் சக்திவாய்ந்ததாகவும், பரவலானதாகவும், அழிவுகரமானதாகவும் இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

