சுமார் 25 கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான “குஷ்” (Kush) ரக போதைப்பொருள் தொகையை இலங்கைக்கு கடத்தி வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்தின் வர்த்தகர்களுக்கான “சிவப்பு வழி” (Red Channel) ஊடாக வெளியேற முயன்ற இலங்கையர் ஒருவர் வியாழக்கிழமை (02) பிற்பகல் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் ராகம பகுதியை சேர்ந்த 38 வயதுடையவர் என்பதுடன், அவர் மோட்டார் சைக்கிள் புகையிரைச்சலை தடுக்கும் கருவிகளை (Silencers) பழுதுபார்ப்பவர் என தெரியவந்துள்ளது.
இவர் தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான UL-403 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவர் கொண்டு வந்த நான்கு பயணப் பொதிகளில் இருந்த 16 மோட்டார் சைக்கிள் சைலன்சர்களுக்குள் (Silencers), 25 கிலோ 500 கிராம் எடையுள்ள இந்த “குஷ்” போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக, சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் தொகை என்பன கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
டி.கே.ஜி.கபில


