Last Updated:
ஈவு இரக்கமின்றி 4 வயது சிறுவனை தூக்கி தரையிலும், இரும்புக் கம்பியிலும் ஓங்கி அடித்து தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி மும்பையில் குலைநடுங்கச் செய்துள்ளது.
மகாராஷ்டிராவில் 4 வயது சிறுவனை பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் தூக்கி தரையில் அடித்து வீசிய சம்பவம் குலைநடுங்க வைத்துள்ளது. சிறுவனின் தந்தையுடன் ஏற்பட்ட சிறு தகராறில் கொலைவெறித் தாக்குதல் நடத்தியது ஏன்? நடந்தது என்ன?
பெரியவர்கள் சண்டையில், ஒன்றும் அறியாத சிறுவனின் காலைப் பிடித்து தலையை தரையிலும், இரும்புக் கம்பியிலும் ஓங்கி அடித்த சிசிடிவி காட்சி வெளியாகி இதயங்களை நொறுங்கச் செய்துள்ளது… தந்தை உடனான சண்டையில் அவரது மகனை கொடூரமாக தாக்கிய அரக்க குணம் கொண்டவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமா?
மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே வசாய் பகுதி அமைந்துள்ளது. அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். அங்கே வசித்துவரும் சந்தீப் பவார் என்பவர் பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் எல்லாம் வம்பு இழுத்துள்ளார். இந்த நிலையில் எதிர்வீட்டில் உள்ள ஒருவரிடம் தகராறு செய்துள்ளார். அதில் வாக்குவாதம் முற்றியதும் உடனே இடத்தை காலி செய்துள்ளார்.
பெரியவர்கள் சண்டையில் நேருக்குநேர் மோத முடியாத சந்தீப் மாடிப் படியில் இறங்கி கீழே வந்துள்ளார். அங்கு குடியிருப்பில் உள்ள குழந்தைகள் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அதில், உள்ளே சண்டைப் போட்டவரின் 4 வயது மகன் விக்னேஷ் என்பவர் ஆட்டோவுக்கு இடையே விளையாடிக் கொண்டிருந்தார். விறுவிறு என அங்கு சென்ற சந்தீப், சிறுவன் விக்னேஷின் கால்களை பிடித்து வெளியே இழுத்து வந்துள்ளார். அடுத்த கணமே அந்த சிறுவனை தலைக்கு மேல் தூக்கி சுற்றி தரையில் ஓங்கி அடித்துள்ளார்.
அப்படியும் ஆத்திரம் தீராமல் தலைகீழாக தூக்கிச் சென்று இரும்புக் கம்பியில் அடித்து மனித மிருகமாக மாறியுள்ளார். இதில், தலையில் பலத்த காயமடைந்த சிறுவன் வலியால் கதறி துடித்துள்ளான். அப்படியும் மனம் இறங்காத கல் நெஞ்சம் படைத்த கொடூரன் தொடர்ந்து சிறுவனை தரதரவென இழுத்து வந்து வீதியில் வீசியுள்ளார். அதைக் கண்டு அங்கிருந்தவர்கள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் அதிர்ச்சியில் ஆடிப்போயுள்ளனர்.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தந்தை உடனான தகராறில் பழிவாங்கும் நோக்கில்தான் சிறுவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
4 வயது சிறுவன் மீது கொடூர தாக்குதல்… தந்தையுடன் ஏற்பட்ட சிறு தகராறில் வெறியனாக மாறிய பக்கத்து வீட்டுக்காரர்…


