Last Updated:
ஐஸ்கிரீம் விற்பனைக்குச் சென்ற இளைஞரை கொலை செய்து, தலையை துண்டித்து எடுத்துச் சென்று எரிக்க முயன்ற சம்பவம் உத்தரப்பிரதேசத்தையே உலுக்கியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் ஐஸ்கிரீம் வியாபாரியை நடு ரோட்டில் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தலையை துண்டித்து எடுத்த சம்பவம் குலைநடுங்க வைத்துள்ளது. சிறு வாய்த் தகராறு கொடூர கொலையில் முடிந்ததன் பின்னணி என்ன?
உத்தரப்பிரதேசத்தில் பாராபங்கி மாவட்டத்தில் உள்ள பாராபெஹதா கிராமத்தைச் சேர்ந்தவர் பப்லு. 25 வயதான இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். பப்லு தனது குடும்ப வாழ்வாதாரத்துக்காக ஊர் ஊராக ஐஸ்கிரீம் விற்பனை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தனது ஊரில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பர்சாவல் கிராமத்திற்கு ஐஸ்கிரீம் விற்பனைக்குச் சென்றுள்ளார். ஊரின் மையப் பகுதியில் ஐஸ் விற்பனையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு 50 வயதான சங்கர் என்பவர் வந்துள்ளார். அவர், இங்கெல்லாம் ஐஸ்கிரீம் விற்பனை செய்யக்கூடாது என்று கூறியுள்ளார். அதை காதில் வாங்கிக் கொள்ளாத பப்லு தொடர்ந்து ஐஸ் விற்பனையில் கவனம் செலுத்தியுள்ளார்.
அதை பார்த்து ஆத்திரமடைந்த சங்கர், வியாபாரியிடம் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றி கைகலப்பாகியுள்ளது. உடனே சங்கர் தனது கையில் வைத்திருந்த அரிவாளால் பப்லுவை தாக்கி கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். அப்படியும் ஆத்திரம் தீராமல் தலையை துண்டித்து எடுத்துள்ளார். அதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். கொடூர செயலில் ஈடுபட்ட சங்கர், வெட்டப்பட்ட தலையை தனது கையில் எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றுள்ளார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், சங்கரின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அங்கு சமையல் செய்து கொண்டிருந்தவர், வெட்டப்பட்ட தலையை அடுப்பில் வைத்து எரிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, லேசாக எரிந்த நிலையில் கிடந்த தலையைக் கைப்பற்றிய போலீசார் சங்கரை கைது செய்தனர். ஐஸ் விற்பனை தொடர்பான வாக்குவாதத்தில்தான் வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கிராமத்தில் ஐஸ்கிரீம் விற்பனைக்குச் சென்ற இளைஞரை கொலை செய்து, தலையை துண்டித்து எடுத்துச் சென்று எரிக்க முயன்ற சம்பவம் உத்தரப்பிரதேசத்தையே உலுக்கியுள்ளது.


