Last Updated:
கடந்த ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தற்போது அவர் ஒரு நாள் போட்டி தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், அவர் ஓய்வை திரும்பப் பெற்று மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு விருப்பம் தெரிவித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் வலுவான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இந்த போட்டியில் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஓபனிங் பேட்ஸ்மேன் ஆக களம் இறங்கிய அவர், 38 பந்துகளில் தலா 5 சிக்சர் மற்றும் பவுண்டரியுடன் 69 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். இந்த போட்டியில் 22 ரன்கள் என்ற வெற்றி இலக்கை 16 ஓவர்களுக்கு உள்ளாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி எடுத்தது.
இந்த போட்டியில் விராட் கோலியின் ஃபிட்னஸை பலரும் பாராட்டி வருகிறார்கள். இது பற்றி சென்னை அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு கூறியதாவது: “விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கை இன்னும் முடிவுக்கு வரவில்லை. அவர் இன்னும் 5 முதல் 6 ஆண்டுகள் வரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடலாம். என்னை பொறுத்த அளவில் அவரை சிறந்த டெஸ்ட் கேப்டன் என்று சொல்வேன். அவரது ஆக்ரோஷமான அணுகுமுறை இந்தியாவுக்கு வெளிநாடுகளில் பல வெற்றிகளை பெற்று தந்திருக்கிறது.
அந்த அணுகுமுறையை தற்போது பேட்டிங்கில் விராட் கோலி காட்டி வருகிறார். அதேபோன்று கேப்டன் பதவியிலும் செயல்பட்டால் இந்திய கிரிக்கெட்டுக்கு அது ஒரு பெரிய பலமாக அமையும்” என்று கூறினார். விராட் கோலி கடந்த 2022 ஆம் ஆண்டு டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதன் பின்னர் கடந்த ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தற்போது அவர் ஒரு நாள் போட்டி தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார்.


