Last Updated:
குஜராத்தில் வீட்டு ஓனர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பணிப்பெண்ணை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தில் பணிப்பெண் மர்ம மரணம் தொடர்பாக வீட்டு ஓனர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கொடுத்த கடனை திருப்பிக் கேட்டதால் திட்டமிட்டு தீர்த்துக்கட்டிய கும்பல் கூண்டோடு சிக்கியது எப்படி?
குஜராத் மாநிலம் பாலன்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரேகா ரத்தோர். இவரது வீட்டில் சாந்தி பென் என்பவர், வீட்டு வேலை செய்து வந்துள்ளார். நாளடைவில் ரேகாவுக்கும், சாந்திக்கும் நல்ல நட்பு ஏற்பட்டு தோழிகளாக மாறியுள்ளனர். 15 ஆண்டுகளாக ஒருவரையொருவர் தெரியும் என்பதால் கொடுக்கல் வாங்கலும் இருந்துள்ளது. கடந்த ஆண்டு வீட்டு ஓனரான ரேகா பர்னிச்சர் தொழில் தொடங்குவதற்காக பணிப்பெண் சாந்தியிடம் நகை மற்றும் பணம் வாங்கியுள்ளார்.
சில மாதங்கள் கழித்து சாந்தி, கடனாக கொடுத்த நகை மற்றும் பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். அதுவரை தோழிகளாக பழகியவர்களுக்கு இடையே பகை உருவாகியுள்ளது. இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி சாந்தி பென் திடீரென காணாமல் போயுள்ளார். இது தொடர்பான புகாரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் பயன்பாட்டில் இல்லாத குடோனில் உள்ள கீழ் தளத்தில் சாந்தி பென் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க விரும்பாத ரேகா, கூட்டுச் சதியில் ஈடுபட்டுள்ளார். அதன்படி, சம்பவத்தன்று சாந்தி பென்னை, தனது பர்னிச்சர் கடைக்கு வரவழைத்துள்ளார். அங்கு மயக்க மருந்து கொடுத்து அவரை அடித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர், உடலை சாக்குப் பையில் அடைத்து குடோனில் தூக்கிப் போட்டுள்ளனர். இதை கண்டுபிடித்த போலீசார் ரேகா ரத்தோருடன் சேர்ந்து அவருக்கு உதவிய ஒருவரை கைது செய்துள்ளனர்.


