தெற்கு கோவாவின் மாதேகல் ககோரா பகுதியைச் சேர்ந்தவர், 20 வயதான சோஹம் சுஷாந்த் நாயக். இவரது தந்தை, குர்ஷோரம் பகுதி பாஜக கவுன்சிலராக பொறுப்பில் உள்ளார். சோக்கு, சொகுசு என ஊர் சுற்றிவந்த சுஷாந்த், தனது நண்பர்களுடன் சேர்ந்து குடித்து, கும்மாளம் போடும்போது தனது செல்போனில் இருந்த சில ஆபாச வீடியோக்களை, அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
பல சிறுமிகளுடன் சுஷாந்த் மிகவும் நெருக்கமாக இருக்கும் அந்த ஆபாச வீடியோக்களை அவரது நண்பர்களில் சிலர் இணையத்தில் ஷேர் செய்துள்ளனர். அந்த வீடியோக்களால் சுஷாந்த் நாயகின் வக்கிர புத்தி கோவா முழுக்க வெட்ட வெளிச்சமானது. சிறுமிகளைச் சீரழித்ததாக சுஷாந்த் நாயக் மீது குட்சாடே காவல் நிலையத்தில் பலரும் புகார் அளித்தனர். சுஷாந்த் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட சிறுமிகள் தரப்பிலிருந்து புகார் வரும் வரையில் காத்திருக்காமல் தாமாக முன்வந்து வீடியோக்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றும் கோவா மக்கள் வலியுறுத்தினர்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சுஷாந்த் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அவர் கடந்த 3 ஆண்டுகளாக சுமார் 20க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக எடுத்து மிரட்டி, தனது பாலியல் இச்சைக்கு பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து சுஷாந்த் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும், இதில் பாதிக்கப்பட்ட சிறுமிகளைக் கண்டறிந்து, அவர்களிடம் வாக்குமூலம் வாங்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதில் இதுவரை 3 சிறுமிகள் போலீசில் வாக்குமூலம் கொடுத்ததாக தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், 2023ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அதே ஆண்டில் ஜூன் 30ஆம் தேதி வரை சுஷாந்த் தன்னிடம் நட்பாக பழகி வந்ததாகவும், பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றதாகவும், ஒரு கட்டத்தில் ஆள் அரவமற்ற இடத்துக்கு அழைத்துச் சென்று, தனது விருப்பத்திற்கு மாறாக பாலியல் வன்கொடுமை செய்து சித்ரவதைக்கு ஆளாக்கியதுடன், அதை வீடியோவாக எடுத்துவைத்து மிரட்டியதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இதேபோல மற்றொரு சிறுமி அளித்த புகாரில், ‘2024 மற்றும் 2025ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் சுஷாந்த் தன்னை இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்புகொண்டு பழகியதாகவும், தன்னுடைய அந்தரங்க புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் மூலம் தனக்கு அனுப்பி வைத்து, தன்னை தனிமையில் வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், மேலும் இதுபோல் தனது தோழிகளையும் அவரின் இச்சைக்கு பயன்படுத்துவதற்காக தன்னிடம் விவரங்களைக் கேட்டதாகவும் அந்த சிறுமி புகாரில் தெரிவித்துள்ளார்.’
சுஷாந்த் மீது சிறுமிகள், பெண்கள் அளித்துவரும் வாக்குமூலங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இச்சம்பவம் தொடர்பாகப் பேசிய தெற்கு கோவா காவல் கண்காணிப்பாளரான சந்தோஷ் தேசாய், 15-க்கும் மேற்பட்ட சிறுமிகள் மட்டுமல்லாது, மேலும் சில இளம்பெண்களையும் சுஷாந்த் சீரழித்திருப்பதாகக் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்கள், சிறுமிகள் முன்வந்து சுஷாந்த் மீது புகார் அளிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் கூடுதல் பிரிவுகள் சேர்க்கப்படும் எனவும், தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள 3 வழக்குகளும் கிரைம் பிராஞ்சுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவில் சுஷாந்த் நாயக் குறித்த மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

