மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட விசேட விடுமுறை தினத்தில், விதிகளை மீறி வகுப்பு நடத்திய ஆசிரியர்களை ஹட்டன் பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
மத்திய கிழக்கு போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு, நாட்டின் எரிபொருள் கையிருப்பை முகாமைத்துவம் செய்வதற்காகப் புதன்கிழமைகளில் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை தினத்தில் ஹட்டன், ஹிஜிராபுர பகுதியில் உள்ள திறந்தவெளி இடமொன்றில், ஹட்டன் பகுதியின் பிரதான தமிழ் பாடசாலை ஒன்றைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தியுள்ளனர்.
இது குறித்துப் பிரதேச மக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், ஹட்டன் தலைமையகப் பொலிஸ் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஆர்.ஏ.டி. சுகததாச சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டார்.
அரசாங்கத்தின் உத்தரவு மற்றும் கல்வி அமைச்சின் சுற்றுநிருபம் என்பன குறித்து ஆசிரியர்களுக்குத் தெளிவுபடுத்திய பொலிஸார், உடனடியாக வகுப்புகளை நிறுத்துமாறு பணிப்புரை விடுத்து மாணவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
புதன்கிழமைகளில் ஆசிரியர்கள் எவ்விதமான புறநிலை வகுப்புகளையும் நடத்தக்கூடாது என கல்வி அமைச்சு ஏற்கனவே கண்டிப்பான சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


