நாட்டில் அண்மையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கட்டுமானப் பொருட்களின் விலைகளும் பாரியளவில் உயர்ந்துள்ளன. இதனால் நாட்டின் கட்டுமானத் துறை கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாகப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
சில நாட்களுக்கு முன்னர் 23,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு ‘கான்டர்’ மணலின் விலை, தற்போது 2,000 முதல் 3,000 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தற்போது ஒரு கான்டர் மணல் 25,000 முதல் 26,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
மணல் அகழ்வு மற்றும் விற்பனை நிலையங்களை நடத்துபவர்கள், எவ்வித கட்டுப்பாடுகளுமின்றித் தன்னிச்சையாக விலைகளை நிர்ணயிப்பதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.
கட்டுமானத் துறையில் மற்றுமொரு அத்தியாவசியப் பொருளான சிமெந்து மூடை ஒன்றின் விலை சுமார் 200 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு மூடை சிமெந்தின் புதிய விலை 2,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
புதிய வீடுகளைக் கட்டுதல் மற்றும் திருத்த வேலைகளில் ஈடுபட்டுள்ள நடுத்தர வர்க்கத்தினர், இந்தத் திடீர் விலை உயர்வால் தமது பணிகளைத் தொடர முடியாமல் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.


