முன்னதாக மேற்காசியாவில் நிலவும் அசாதாரண போர் சூழல் குறித்து மாநிலங்களையில் பேசிய நரேந்திர மோடி, ” மேற்காசியாவில் மோதல்கள் தொடரும் பட்சத்தில் உலக பொருளாதாரம் மேலும் பாதிப்புக்கு உள்ளாகும் என்ற எச்சரிக்கையுடன் இந்தியர்கள் செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும், பேசிய அவர், ” மேற்காசிய போர் சூழலை அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், நெருக்கடி வாய்ந்த இந்த தருணத்தில் மத்திய அரசு மேற்கொள்ளும் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கூறினார்.
பிரச்சனையின் தீவிரத் தன்மை என்ன? இன்றைய நவீன சமூகம் ஒரு சில முக்கியமான கட்டமைப்புகளை நம்பியே இயங்குகிறது. இந்த அனைத்து கட்டமைப்புகளுக்கு அடிப்படை மூலமாக விளங்குவது எரிபொருளாகும் .
ஈரான் மீது நடந்துவரும் போரின் காரணமாக உலகம் முழுவதும் எண்ணெய், எரிவாயு உள்ளிட்டவற்றின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. வரலாற்றில் முதன்முறையாக, வணிகக் கப்பல் போக்குவரத்திற்கு இந்த நீரிணை முற்றிலும் மூடப்பட்டுள்ளது. உலகளவில் பயன்படுத்தப்படும் கச்சா எண்ணெயில் 20%, இயற்கை எரிவாயுவில் 20% மற்றும் எல்பிஜி (LPG) விநியோகத்தில் 20% இந்த ஒரு பாதை வழியாகவே நடைபெறுகிறது
எண்ணெய், எரிவாயு தனிமனித நுகர்வு பொருட்களாக மட்டுமல்லாமல் உணவுப் பொருள், விவசாயிகளுக்கு தேவையான உரம், மருத்துவ உபகரணங்கள், தொழில் உற்பத்தி என அனைத்திற்கும் உயிர்நாடியாக உள்ளது. நாட்டின் எரிபொருள் விநியோக கட்டமைப்பு விழத் தொடங்கினால், அதைச் சார்ந்திருக்கும் மற்ற அனைத்து நவீன துறைகளும் சீட்டுக்கட்டுகளைப் போல வரிசையாகச் சரிந்துவிடும். அது மட்டுமின்றி மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியும் ஏற்படும். எனவே, அமெரிக்கா-இரான் மோதல்கள் தொடர்ந்து மோசமாகும் பட்சத்தில் கொரோனா பெருந்தொற்றை விட மோசமான பாதிப்பாக அமையலாம் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர்.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அண்டை நாடான பாகிஸ்தான் அனைத்துப் பள்ளிகளையும் இரண்டு வாரங்களுக்கு மூடியுள்ளது. அரசு அலுவலகங்கள் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே செயல்படுகின்றன. 50 சதவீத அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த நாட்டின் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பெட்ரோல் விலை 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
தென்கிழக்கு ஆசியா நாடான பிலிப்பைன்ஸ் ‘தேசிய எரிசக்தி அவசரநிலை’ (National Energy Emergency) பிரகடனப்படுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக, கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று பரவிய காலத்தில் தான் இந்நாடு தேசிய அவசரநிலையை அறிவித்திருந்தது. அப்போது உலகிலேயே மிகக் கடுமையான ஊரடங்கு நடைமுறைகளை அமல்படுத்திய நாடுகளில் பிலிப்பைன்ஸும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் நிலை என்ன? கச்சா எண்ணைய்யை பொறுத்த வரையில் உள்நாட்டு உற்பத்தி வெறும் 11.4% ஆக உள்ளது. 89% தேவைகளை பூர்த்தி செய்ய 40 நாடுகளிலிருந்து இந்தியா இறக்குமதி செய்கிறது. 70 சதவீத விநியோகம் ஹார்முஸ் நீரிணைக்கு வெளியே உள்ள பாதைகள் வழியாக நடைபெறுகிறது. எனவே, இந்தியாவின் கச்சா எண்ணெய் விநியோகம் பாதுகாப்பாக உள்ளது.
சமையல் சிலிண்டரை பொறுத்தவரையில் இந்தியா தனது மொத்த நுகர்வில் சுமார் 60 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. இந்த இறக்குமதியில் 90% ஹார்முஸ் நீரிணை வழியாகவே நடைபெறுகிறது. தற்போதைய போர் பதற்றங்களால் விநியோகம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
அரசு நடவடிக்கை : எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடை சமாளிக்க வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இயற்கை எரிவாயு (PNG) இணைப்புக்கு மாறிட மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது குழாய் மூலம் நேரடியாக சமையலறை அடுப்புகளுக்கே தடையின்றி வழங்கப்படும் என்பதால், சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் அவசியம் இனி இருக்காது.
இந்நிலையில், குழாய் மூலம் இயற்கை எரிவாயு (PNG) இணைப்பு வசதி உள்ள இடங்களில், அதனைப் பெற மறுக்கும் வீடுகளுக்கு சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்படும் என மத்திய அரசு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இதற்கிடையே நாட்டில் தேவையான அளவு உரங்களை முறையாக விநியோகிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எரிவாயு பதுக்கலை தடுக்க முன்னுரிமை அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 12,000க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் சுமார் 15,000க்கும் அதிகமான சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
எனவே,பிரதமர் நரேந்திர மோடியின் ‘கொரோனா காலத் தயார்நிலை’ குறித்த பேச்சு என்பது போர் சூழலால் மாறிவரும் சூழ்நிலைகள் குறித்து இந்தியர்களுக்கு தெரியபடுத்தவும், வரப்போகும் சவால்களை எதிர்கொள்வதற்கான அழைப்பாகவுமே பார்க்கப்படுகிறது.
தனது பேச்சில் நெருக்கடி இருப்பதை உறுதிப்படுத்திய பிரதமர் , 2020-ல் கொரோனா காலத்தில் காட்டிய அதே ஒத்துழைப்பை மாநிலங்கள் இப்போதும் வழங்க வேண்டும் என்று மட்டுமே தெரிவித்தார். மாறாக, ஊரடங்கு போன்ற எந்த திட்டத்தையும் அவர் அறிவிக்கவில்லை. எனவே, பொதுமக்கள் பதட்டமில்லாமல் அதிகாரப்பூர்வ தகவல்கள் அடிப்படையில் செயல்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
