Last Updated:
அதிகாரப்பூர்வ ஆலோசனைகள் மற்றும் எதிர்க்கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்கனவே தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை 2029 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 543 இல் இருந்து 816 வரை உயர்த்தப்படலாம் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.
மத்திய அரசு 2029 பொதுத்தேர்தலுக்கு முன்னதாகவே மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. 2023-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டத்தில் சில முக்கிய திருத்தங்களைக் கொண்டு வருவதன் மூலம், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இந்த இடஒதுக்கீட்டை ‘ஃபாஸ்ட் டிராக்’ முறையில் அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ ஆலோசனைகள் மற்றும் எதிர்க்கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்கனவே தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.
இந்த மாற்றத்தின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், மகளிர் இடஒதுக்கீடு என்பது வெறும் தொகுதிகளை ஒதுக்குவது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மக்களவை இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ஒரு மாபெரும் கட்டமைப்பு மாற்றமாக அமையும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.
தற்போதைய திட்டத்தின்படி, 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ‘தொகுதி மறுவரையறை’ செய்யப்பட உள்ளது. இதன் விளைவாக, தற்போது மக்களவையில் உள்ள 543 இடங்கள் 816 இடங்களாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு இடங்கள் அதிகரிக்கப்படும்போது, அதில் மூன்றில் ஒரு பங்கு (33%) இடஒதுக்கீட்டின் கீழ் பெண்களுக்கு சுமார் 273 இடங்கள் ஒதுக்கப்படும். இது இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்த்தும்.
மகளிருக்கு 33% இட ஒதுக்கீட்டை பொதுத்தேர்தலுக்கு முன் நிறைவேற்ற திட்டம்.. மக்களவை தொகுதிகள் அதிகரிக்கப்பட வாய்ப்பு


