Last Updated:
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவைச் சிதைக்க முயற்சிக்கும் சக்திகள் குறித்து அமெரிக்க அரசு விசாரணை நடத்த வேண்டும்
ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று பரிந்துரைத்த அமெரிக்காவை சேர்ந்த சர்வதேச சமய சுதந்திர ஆணையம் (USCIRF) வெளியிட்டுள்ள பரிந்துரைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அந்த அமைப்பை கண்டித்து முன்னாள் நீதிபதிகள் உள்பட 275 இந்திய ஆளுமைகள் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்கச் சர்வதேச சமய சுதந்திர ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் சிறுபான்மையினரின் நிலை மோசமடைந்து வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளது. குறிப்பாக, ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்திற்கு (RSS) தடை விதிக்க வேண்டும், அதன் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய வேண்டும் மற்றும் அதன் உறுப்பினர்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என அந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது.
மேலும், அந்த ஆணையம் 2025-ஆம் ஆண்டு அறிக்கையில், சீக்கிய பிரிவினைவாதிகளைக் கொல்லச் சதி செய்ததாகக் கூறி, இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’ (RAW) மீது தடை விதிக்க வேண்டும் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இந்த அறிக்கையை முற்றிலுமாக நிராகரித்துள்ள இந்தியாவின் 275 முன்னாள் நீதிபதிகள், ஐஏஎஸ்/ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: அமெரிக்க சர்வதேச சமய சுதந்திர ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை எந்தவிதமான முறையான ஆய்வும் இன்றி, ஒரு குறிப்பிட்ட உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய அமைப்புகள் குறித்த தவறான பிம்பத்தை இது உலகளவில் உருவாக்குகிறது.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் ‘ரா’ அமைப்புகள் குறித்துக் கூறப்பட்டுள்ள புகார்கள் எதற்கும் தெளிவான ஆதாரங்கள் இல்லை. முறையான தகவல்கள் இன்றி இந்திய ஜனநாயக அமைப்புகளை இந்த ஆணையம் தொடர்ந்து அவமதித்து வருகிறது.
இந்தியா ஒரு வலிமையான ஜனநாயகம் கொண்ட நாடு. இங்குள்ள நீதிமன்றங்களும், அரசமைப்பு நிறுவனங்களும் முறையாகச் செயல்படுகின்றன. சமய சுதந்திரம் தொடர்பான பிரச்சினைகள் இங்கு ஒருபோதும் புறக்கணிக்கப்படுவதில்லை. என்று கூறியுள்ளனர்.

