Last Updated:
பிஎஸ்எல் தொடரில் பங்கேற்றால் வீரர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற தொணியில் பகிரங்க மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னருக்கு பயங்கரவாதிகள் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிரட்டலைப் பொருட்படுத்தாமல் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடுவார்களா?
பாகிஸ்தானில் பி.எஸ்.எல். டி-20 கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க உள்ள வெளிநாட்டு நட்சத்திர வீரர்களுக்குத் தான் பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதை அலட்சியப்படுத்திவிட்டு பாகிஸ்தானுக்கு வந்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்கிற தொணியில் ஜமாத்-அல்-அரார் ஆயுதக் குழு எச்சரித்துள்ளது. கிரிக்கெட் வீரர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுமா?
இந்தியாவில் வெற்றிகரமாக நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போன்று, பாகிஸ்தானில் பிஎஸ்எல் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 11-வது தொடர் வருகிற 26 ஆம் தேதி முதல் மே 3 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 8 அணிகள் பங்கேற்கும் தொடரில் மொத்தம் 44 போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்தப் போட்டிகள் அனைத்தும் லாகூர் மற்றும் கராச்சியில் உள்ள இரு மைதானங்களில் மட்டுமே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஈரான் – இஸ்ரேல் போரால் மேற்கு ஆசிய பகுதியில் பதற்றமான சூழல் நிலவியுள்ளது. இதன் எதிரொலியாக உலக நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவியுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு காரணங்களால் எதிர்வரும் பிஎஸ்எல் போட்டியை நேரில் கண்டுகளிக்க ரசிகர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், கொரோனா காலத்தைப் போன்று மைதானத்தில் ரசிகர்கள் இன்றி போட்டி நடத்தப்படுகிறது.
இந்த அறிவிப்பால் ஏற்கெனவே ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ள நிலையில், மறுபுறம் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலும் தலை தூக்கியுள்ளது. பாகிஸ்தானில் நடைபெறவுள்ள பிஎஸ்எல் போட்டிக்கு வெளிநாட்டு வீரர்களை அனுப்ப வேண்டாம் என்று அந்தந்த நாட்டு கிரிக்கெட் அமைப்புக்கு தெஹ்ரிக்-இ-தலிபான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஜமாத்-உல்-அரார் ஆயுதக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் மூலம் ஆஸ்திரேலிய வீரர்கள் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், லாபுஷேன், ஆடம் ஜம்பாவுக்கு பகிரங்க மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதில் டேவிட் வார்னர் கராச்சி கிங்ஸ் அணியை வழிநடத்த உள்ளார். ஸ்டீவ் ஸ்மித் முல்தான் சுல்தான்ஸ் அணிக்காக விளையாடுவதன் மூலம் முதல்முறையாக பிஎஸ்எல் தொடரில் களமிறங்க உள்ளார். பயங்கரவாதிகள் மிரட்டலால் இங்கிலாந்து வீரர் மொயீன் அலி, நியூசிலாந்தின் டிவான் கான்வே ஆகியோரும் போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தங்களது எச்சரிக்கையை மீறி, வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தான் வந்தால், எதுவும் நடக்கலாம் என ஜமாத்-உல்-அரார் அமைப்பு எச்சரித்துள்ளது.
எனவே, பிஎஸ்எல் தொடரில் பங்கேற்றால் வீரர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற தொணியில் பகிரங்க மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், பிஎஸ்எல் தொடரில் வார்னர், ஸ்மித் போன்ற நட்சத்திர வீரர்கள் பங்கேற்பார்களா? திட்டமிட்டபடி பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் நடைபெறுமா? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


